வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 10, 2016

மகத்தான வாழ்வு எது ?

நமது வாழ்க்கை எப்போது அர்த்தமுள்ளதாக ஆகும் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கும்.
·         நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து வாழ்ந்தால்
·         புகழுடைய வாழ்வு கிடைத்தால்
·         பெரும் வெற்றி களை கொடுத்தால்
என இன்னும் நிறையச் சொல்லாம்.
உண்மையில் ஒரு மனிதரின் வாழ்க்கையை மகத்தான வாழ்க்கையாக மாற்றுவது அவரை பின்பற்றி எத்தகைய சமூகம் உருவாகிறது என்பதை பொருத்ததாகும்.
இறைவன் வைத்த சோதனைகளை வென்றெடுத்த இபுறாகீம் நபிக்கு இறைவன் வழங்கிய பரிசு அவரை பின்பற்றி நடக்கும் ஒரு சமுதாயம் உருவாகும் என்ற வாக்குறுதியாகும்.
وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا
அல்லாஹ்விற்கு மிகப்பிரியமானவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கிற பரிசு இது.
மாவீரன் அலக்ஸாண்டரைப் பின்பற்றியோ உலகை கட்டி ஆண்ட பிரஅவ்ன் காரூனைப் போன்ற செல்வந்தர்களைப் பின்பற்றியோ எந்த சமுதாயம் உருவாகியது என்ற கேள்வி வரலாற்றில் பெரிதாக எழுந்து நிற்கிற கேள்வியாகும்.
நீங்கள் இமாம் அபூஹனீபாவையோ (இறப்பு ஹிஜ்ரீ 150) இமாம் ஷாபியையோ (இறப்பு ஹிஜ்ரீ 204) கற்பனை செய்து பாருங்கள்!  எவ்வளவு மகத்தான வாழ்வு அவர்களுடையது !  
அவர்கள் வாழ்ந்து மறைந்து ஆயிரத்து இருநூறு ஆண்டுகளை கடந்து விட்டபிறகும் கூட தம் வழிப்படி நடக்கும் எத்தகைய மாபெரும் சமூகங்கள் அவர்களுக்கு கிடைத்தன?  
உண்மையிலேயே இந்த உலகில் பொறாமைப் படத்தக்க ஒரு வாழ்க்கை இருக்கிறதென்றால் இது வன்றோ அது
இப்பெருமக்களுடைய பெருமைகளுக்கு காரணம். நிச்சயம் பணமோ பதவியோ அல்ல. அவர்களது கல்வியும், வாழும் தலைமுறைக்கும் அதற்கடுத்து வருகிற தலைமுறையினருக்கும் தாம் செய்ய வேண்டிய கடைமையை செய்ய வேண்டும் என்ற இலட்சிய வேட்கையும் அதை இஹ்லாஸாக செய்ததுமேயாகும்.
இந்த வரிசையில நமது நூற்றாண்டுக்கு முன்பு நமது பகுதியில் மகத்தான பெருவாழ்வை வாழ்ந்து தமக்குப் பின் ஒரு பெரும் பாரம்பரியத்தை விட்டுச் சென்றவர் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை நிறுவிய அப்துல் வஹ்ஹாப் ஹஜ்ரத் அவர்கள். ஷம்சுல் உலமா என்ற பட்டத்தை ஆங்கில அரசு அவருக்கு வழங்கியது.
மாணவர்களால் அஃலா ஹஜ்ரத் பெரிய ஹஜ்ரத் என்று அழைக்கப்பட்டார்கள். இப்போது தென்னிந்தியாவைப் பொருத்த வரை அஃலா ஹஜ்ரத் என்ற பெயரே அன்னாருக்கு அடையாளப் பெயராக நிலைத்து விட்டது.
அன்னாரின் மகத்தான வாழ்க்கையை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்டீர்கள் என்றால் ஒரு செய்தியை சொன்னால் போதும்.
·         தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் ஏராளமான பள்ளிவாசல்கள் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அண்ணல் அஃலா ஹஜ்ரத்
·         ஏராளமான மதரஸாக்கள் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அண்ணல் அஃலா ஹஜ்ரத்.
·         திருக்குர் ஆனும் ஹதீஸ் நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் அதற்கு காரத்ணம் அண்ணல் அஃலா ஹஜ்ரத்.
·         மார்க்கச் சொற்பொழிவாளர்களாக இன்று நாட்டில் ஏராளமானோர் இருக்கீறார்கள் என்றால் அதற்கு காரணம் அண்ணல் அஃலா ஹஜ்ரத் .
ஒரு தனிநபர் தென்னிந்தியாவில் ஒட்டுமொத்த மார்க்கத்தின் வளர்ச்சிக்கு காரணமாகி தீனோடு சம்பந்தப் பட்ட அனைத்து துறைகளிலும் தனது சமூகத்தை உருவாக்கிச் சென்றிருக்கீறார் என்றால் அவரது மகத்துவம் எத்தகையது என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அன்றைய வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் அப்துல் காதிர் பாத்திமா தம்பதியரின் மகனாக ஹிஜ்ரி 1246 ஜமாதுல் அவ்வல் பிறை 1 – கீபி 1830 ல் பிறந்தார்கள், அவரது தந்தையின் பூர்வீகம் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டிக்கு அருகில் இருக்கும் ஆத்தூர் ஆகும்
நான்கு வயதில் தந்தையையும் 11 வது வயதில் தாயாரையும் இழந்தார்கள்.
அவரது தாயார் உயிருடன் இருக்கிற போதே தன் மகனுக்கு நல்ல ஆசிரியர்களிடம் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்கள், அதனால் மிகச் சிற்பான மனிதர்களிடம் கல்வி கற்கிற வாய்ப்பு அன்னாருக்கு கிடைத்தது. நாட்டின் பல பாகங்களிலும் சென்றும் மக்காவிற்கு சென்றும் கல்வி கற்றார்கள்..
Ø  ஹக்கீம் ஜைனுல் ஆபிதீன்,
Ø  முப்தீ மெளலானா குலாம் காதிர்,
Ø  ரஹ்மத்துல்லாஹ் கீரானவி
Ø  செய்யத் ஹுசைன் முஹத்திஸ் பெஷாவரீ.,
Ø  சையத் ஷாஹ் அப்துல் லத்தீப் சாஹிப்
போன்ற அன்றைய தலை சிறந்த அறிஞர்களிடம் கல்வி பயின்றார்கள். ரஹ்மத்துல்லாஹ் கீரானவியுடன் அஃலா ஹஜ்ரத்தின் தொடர்பு நெருக்கமாக இருந்தது.
அப்போது வேலூர், ஹைதராபாத் நிஜாம் அப்ஜலுத் தவ்லாவின் கட்டுப்பாட்டில் இருந்தது அதனால் மார்க்க கல்வி படித்தவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. அஃலா ஹஜ்ரத் அவர்ஜள் பல இடங்களிலும் சென்று கல்வி படித்து திரும்பியவுடன் ஹைதரபாத் நிஜாமின் சார்பில் டெபுடி கலக்டருக்கான பதவி கிடைத்தது.
ஆனால் மார்க்க கல்வியை பரப்புவதின் மீதான ஆர்வம் அஃலா ஹஜ்ரத்தின் உள்ளத்தில் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அதனால் அந்தப் பொறுப்பை ஏற்க வில்லை.
அன்றைய காலச் சூழலில் மக்கள் மார்க்க கல்வியில் மிகவும் பின் தங்கியிருந்தது ஹஜ்ரத்திற்கு பெரும் கவலை அளித்தது. தமிழகத்தின் பல இடங்களிலும் பள்ளிவாசல்களில் ஷியாக்களின் கலாச்சார தாக்கத்தால் முஹர்ரம் 10 நாட்களில் மட்டுமே மக்கள் கூடினர். பளிளிவாசல் இயங்கியது. ஒரு முறை நாகூருக்கு அருகில் உள்ள திட்டச்சேரி கிராமத்திற்கு சென்ற போது அங்கு மக்கள் முஹர்ரம் 10 நாளில் பஞ்சா எடுத்து ஊர்வலம் போவதை அறிந்து மிகவும் மனம் வருந்தி அந்த மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லி திருத்தினார். அப்போது அங்கிருந்த கனி தம்பி என்பவர் ஹஜ்ரத் இந்த ஊரூக்கு நீங்க வந்தீங்க மக்களை திருத்தீட்டீங்க! நாடு முழுவது சென்று உங்களைப் போல சீர் திருத்தம் செய்கிறவர்களை உருவாக்க முயற்சி செய்யுங்கள் என்று கேட்டார்.
ஹஜ்ரத்தின் மனதில் அது நீரூபூத்த நெருப்பக கனன்று கொண்டிருந்தது.
இதற்கிடையே ஒரு தோட்ட்த்திலிருந்து கனிகளைப் பறித்துக் கொடுத்துக் கொண்டிருப்பது  போல அவர்கள் கனவு கண்டார்கள். இதற்கான விளக்கத்தை மக்கா சவ்லத்திய்யா மதரஸாவின் நிறுவனர் ரஹ்மதுல்லா கிரானவி (ரஹ்) அவர்களிடம் கேட்டப்போது மார்க்க கல்விப் பண்யில் கவனம் செலுத்துமாறு அன்னார் கூறினார்கள்.

அதற்குப்பின் அஃலா ஹஜ்ரத்  அவர்களின் முழுக்கவனமும் மார்க்க கல்வியின் பால் திரும்பியது,

மார்க்கக் கல்வியை பரப்புவது தான் வாழ்க்கையின் இலட்சியம்  என்று முடிவான பிறகு தன்னுடைய 27 வயதில் தனது வீட்டிலேயே ஒரு மதரஸாவை அஃலாஹ் ஹஜ்ரத் தொடங்கினார்கள்.

ஒரு இலட்சிய வேட்கை கொண்டவர்கள் அதிக நேரம் காலத்தின் வசதிகளுக்காகவும் தேவைகள் நிறைவேறும் வாய்ப்புக்காகவும் காத்திருக்க மாட்டார்கள் அல்லவா?

ஹிஜ்ரீ 1286 – கீபி 1857  ல்
Ø  தன்னுடைய சொந்த இடத்தில்
Ø  சொந்த செலவில்
Ø  சொந்தக் காரகளில் இருக்கிற சிறுவர்களை தேர்ந்தெடுத்து
அவர்களை ஆர்வப்படுத்தி மாணவர்களாக்கி கல்வி பயிற்று வித்தார்கள்.

அவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் தான் பின்னாட்களில் புகழ் பெற்ற குலாம் முஹ்யித்தீன் ஹஜ்ரத் அவர்கள். அவர் அஃலா ஹஜ்ரத்தின் தந்தைக்கு முதல் மனைவியின் மூலம் பிறந்த ஷரபுத்தீன் அவர்களின் மகனார் ஆவார்,  சகோதரர் ஷரபுத்தீன் இளம் வயதிலேயே வபாத்தாக்விட்ட நிலையில் அவரை ஜியாரத் செய்யச் சென்ற போது அவரது மகன் குலாம் முஹித்தீனைப் பார்த்து இவர் தனக்கு மாணவராக இருக்கப் பொருத்தமானவர் எனக் கண்டு அவரை வேலூருக்கு அழைத்து வந்து மதரஸாவில் சேர்த்துக் கொண்டார்கள். அவர் தான் பிற்காலத்தில் மிகவும் பிரபல மடைந்து வேலூர் சின்ன ஹழரத் என்று அழைக்கப்பட்டார்.

6 வருடங்கள் வீட்டிலேயே மதரஸா நடந்தது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இதற்கிடையே ஹஜ்ரத் அவர்களின் முதல் மனைவி ரழிய்யா அமீர் பீபீ அம்மா வபாத்தாகிவிட்டார். ஹழரத்திற்கு முதல் மனைவி மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிற்ந்தன. அவற்றுள் மூத்தவர் ஜியாவுத்தீன் ஹழரத் இளையவர் பால்குடிப் பருவத்திலேயே மரணமடைந்து விட்டார்
.
ஹழரத் அவர்கள் இரண்டாவதாக பட்டேல் தாதாமியான் சாஹிபின் அருந்தவப் புதல்வியை ரஹ்மத் பீபியை 1287 ல் திருமணம் செய்து கொண்டார்கள்,

அதன் பிறகு ஹிஜிரி 1292 – ல்  வேலூர் பெரிய பள்ளிவாசலின் திண்ணைக்கு மதரஸாவை பள்ளிவாசலின் தின்னைக்கு இடம் மாற்றினார்கள். ஆறு வருட காலம் பள்ளிவாசல் திண்ணையில் மத்ரஸா நடைபெற்றது. இத்திண்ணை மதரஸாவில் கல்வி கற்றோர் பின்னாட்களில் சன்மார்க்க அறிவுலகின் நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள்,
Ø  சின்ன ஹழரத் குலாம் முஹ்யித்தீன்
Ø  அஃலா ஹழரத்தின் ஒரே அருந்தவப் புதல்வர் ஜியாவுத்தீன்
Ø  அஃலா ஹழ்ரத் அவர்களால் ரஹ்மத் பாலா மக்தபிலிருந்து கைப்பிடித்து அழைத்து வரப்பட்ட தென்னாடு கண்ட மாபெரும் சட்ட மேதை ஷேக் ஆதம் ஹஜ்ரத்
Ø  ஷம்சுல் உலமா அப்துல் ஜப்பார் மஃகூலி ஹழரத்
Ø  சுல்தானுல் வாயிழீன் முஹம்மது கமாலுத்தீன் ஹழரத்

ஒரு புதிய கல்வி நிலையத்திலிருந்து வெளிப்பட்ட இந்த மாமணிகளின் அபாரமான அறிவாற்றல் உலகின் கவனத்தை ஈர்க்கத்  தொடங்கியது.

நாட்டின்  பல இடங்களிலிருந்து மாணவர்கள் வேலூரின் அந்தப் பள்ளிவாசலின் திண்ணையை தேடி வர ஆரம்பித்தனர்.

மதரஸாவிற்கென்று ஒரு தனி இடமும் கட்டிடமும் தேவை என்ற அவசியம் உணரப்பட்டது.

ஹிஜ்ரீ 1299 ம் ஆண்டு (1875) ல் பள்ளிவாசலுக்கு அருகே இருந்த வீடுகள் விலைக்கு வாங்கப்பட்டு அங்கு மதரஸா இடம் பெயர்ந்தது.  

அப்போது ஹாஜி பாபா மியான் சாஹிப், ஆலஞ்சி முஹம்மது உஸ்மான் சாஹிப், செளகார் ஷம்சுத்தீன் சாஹிப் ஆகியோர் அஃலா ஹஜ்ரத் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தனர். உதவிகள் புரிந்தனர். (அல்லாஹ் இப்பெருந்தகைகளை பெருந்திக் கொள்வானாக!)

அத்தோடு இப்படி ஒரு மதரஸா தொடங்கப்பட்டுள்ளது இதற்கு உதவி புரிவீர் என ஒரு விளம்பரம் தயாரிக்கப்பட்டது ” ஒரு துண்டு பேரீத்தம் பழத்தை கொண்டாவது நரகத்திற்கு அஞ்சி விலகுங்கள்”  தலைப்பில் இடம் பெற்ற அந்த விளம்பரம் ஹஜ்ரத் அவர்கள் பயான் செய்கிற கூட்டங்களில் விநியோகிப்பட்டது, மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் வாசிக்கப்பட்டது தமிழ் உருது பத்ரிகைகளில் விளம்பரமாக வெளியிடப்பட்டது. மக்கள் தாரளமாக உதவி செய்தனர். மதரஸாவிற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தக் கட்டத்தில் தான்  மதரஸாவிற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்ற தேவை உணரப்பட்டது. மக்கள் ஹஜ்ரத்தின் மீது கொண்ட மரியாதையினால் உங்களுடைய பெயர்ச் சார்ந்து ஒரு பெயர் சூட்டுங்கள் என்றார்கள், அதை மறுத்த ஹஜ்ரத் அவர்கள் தன்னுடைய ஷைகுமார்களில் ஒருவரிடம் ஆலோசனை கலந்த போது, குர்ஆனை திறந்த பார்த்து முதலில் கண்ணில் படுகிற வாசகத்தை பெயராக வைக்குமாறு அவர் கூறினார், அதனடிப்படையில் அஃலா ஹஜ்ரத் அவர்களின் கண்ணில் கஹ்பு அத்தியாயத்தின் வல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத்து கைருன் என்ற வசனம் பட்ட்து அதையே பெயராக வைத்தார்கள்.

பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் என்றால் நீடித்து நிற்கிற நற்செயல்கள் என்று பொருள்

கவனியுங்கள்! இன்று மிகப்பெரிய இரு நிறுவனமாக வளர்ந்து நிற்கிற மதரஸா பெயர் புகழுக்கான ஆசைகளில் அமைந்ததல்ல என்ற அற்புதமான பாடம் இதில்  நமக்கு கிடைக்கிறது.

ஹழரத்தின் இந்த வரலாற்றிலிருந்து கிடைக்கிற மிக முக்கிய மான மற்றொரு பாடம்.
மார்க்கப்பாணிக்காக இஹ்லாஸாக தனனை அர்ப்பணித்துக் கொண்ட ஹஜ்ரத் அவர்கள்  அந்த இஹ்லசை  மட்டுமே வைத்துக் கொண்டு ஏனோ தானோ வென ஒரு மதரஸாவை உருவாக்கவில்லை.
தெளிவாக திட்சண்யமாக தன்னுடைய மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டார்கள். தன்னுடைய மாணவர்கள் சமுதாயத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள தேவையை நிறைவேற்றுபவர்களாக மார்க்கத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஆற்றல் பெற்றவர்களாக உருவாக்க நினைத்தார்கள். அஃலா ஹஜ்ரத் அவர்களுடைய சிந்தனையில் உதித்த திட்டம் தான், பட்டம் பெற்ற மார்க்க அறிஞர்கள் என்ற நடை முறை.
இதற்கு முன்பு ஒரு ஆலிமை தேடி மாணவர்கள் ஓதச் செல்வார்கள். அதற்கு கால வரை இருக்காது. கல்வி கற்போருக்கு போதிய வசதிகளும் இருக்காதுபல ஆண்டுகள் ஓதிய பிறகு மாணவர் இன்னொரு உஸ்தாதை தேடிச் செல்வார். முழுமையான ஆலிமாக ஆவதற்குள் அவருக்கு முதுமை வந்து விடும். இதனால் மார்க்க கல்வி படித்த ஆலிம்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள்.
மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.
அஃலா ஹஜ்ரத்தை ஒரு சராசரியான பெரிய மனிதர் என்பதிலிருந்து ஒரு சாதனையாளர் என்ற நிலைக்கு உயர்த்துவது அவர்கள் உள்ளச் சுத்தியோடு செயல் பட்டார்கள் என்பதை போலவே மிக தெளிவாக தூர நோக்கோடு திட்டமிட்டு செயலாற்றினார்கள்.
பாக்கியாத் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் தான் ஆகின்றன. அதற்கு முன்னாலும் தமிழகத்தில் பல மதரஸாக்கள் இருந்தன. உதாரனமாக கீழக்கரை அரூஸிய்யா அரபுக்கல்லூரில் 300 ஆண்டுகள் பழமையானது. ஆனால் அங்கு குரு சிஷ்ய முறை கல்வியும் ஒரு கால வரையறை இல்லாத நடை முறையும் இருந்தது. மார்க்கத்திற்கு தேவையான ஆலிம்கள் கிடைக்காமல் போவதற்கு ஒரு சிஸ்டம் இல்லாமல் இருப்பது நவீன கலைகள் கற்றுக் கொடுக்கப்படாமல் இருப்பதும் காரணம் என்று அறிந்த ஹஜ்ரத் வர்கள் இப்போதைய பட்டம் பெற்ற ஆலிம் என்ற பாரம்பரியத்தை உருவாக்கினார்கள்.
பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியில் ஏழு வருட பாட திட்டத்தில் இள நிலைப் பட்டமான மெளலவி பட்டமும் 9 வருட பாட திட்டத்தில் முது நிலைப் பட்டமான பாஜில் பட்டமும் வழங்கப்பட்டது.
இந்தப் பட்டத்தைப் பெறுவதற்காக நாடு முழுவதிலும் மார்க்க கல்வி பயின்றவர்கள் பாக்கியாத்தில் குவிந்தார்கள், அதனால் பட்டம் கட்டும் மதரஸா தஹ்ஸீல் மதரஸா என்று பாக்கியாத் தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் புகழ் பெற்றது.
முதன் முதலாக 17 பேர் இளநிலை முஹ்தஸரிலும் 2 பேர் முது நிலை முதவ்வல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றனர்.
1305 ல் பாக்கியாத்தில் முதல் பட்டமளிப்பு விழா நடை பெற்ற போது அது தென்னிந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகவும் மிகப் பெரிய நிகழ்வாகவும் இருந்து என்பதை அன்றைய வரலாறு எடுத்துக் காட்டு கின்றன.
ஹிஜ்ரீ 1324 ல் நடை பெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவின் போது சுமார் சுமார் பத்தாயிரம் பேர் திரண்டனர் என அஃலா ஹஜ்ரத்தின் அருமை மகனார் ஜியாவுதீன் அஹ்மது ஹழ்ரத் கூறுகிறார்கள்  
ஆரம்ப காலத்தில் பாக்கியாத்தில் பட்டம் பெற்றவர்கள் வேலூர் தஹ்ஸீல் என அழைக்கப்பட்டார்கள்.
தன்னிடம் பட்டம் பெற்ற மாணவர்கள் தாம் செல்லுகிற இடங்கள் மார்க்க கல்விப் பணியில் ஈடுபட அஃலா ஹஜ்ரத் தன்னுடைய மாணவ்ரகளை அதிகமாக தூண்டினார்கள், அது போல சமுதாயத்திற்கு தேவைப்படும் மற்ற சன்மார்க்கப்பணிகளையும் ஆற்ற மாணவர்களுக்கு உற்சாகம் ஊக்கமும் அளித்தார்கள்.
எனவே வேலூரிலிருந்து பட்டம் பெற்றுச் சென்றவர்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஒரு எழுச்சு உணர்வோடு சென்றனர், பாக்கியாத்தைப் போன்ற பட்டமளிக்கிற மதரஸாக்களை உருவாக்கினார்கள்.
பாக்கியாத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தில்லி தேவ்பந்த மதரஸாவின் முதல்வர் காரி தையிப்ப் சாஹிப் இதைக் குறிப்பிட்டுத்தான் தான் பாக்கியாத்தை நாட்டிலுள்ள மதரஸாக்களின் தாய என்று குறிப்பிட்டார்கள்.

பாக்கியாத்தின் விழுதுகளால் உருவான மதரஸாக்கள்

பொதக்குடி அந்நூருல் முஹம்மதிய்யு அரபுக்கல்லூரி அஃலா ஹஜ்ரத்தின் மாணவர் அப்துல் கரீம் பாகவி அவர்களால் தோற்று விக்கப்பட்ட மதரஸாவாகும் அங்கிருந்து வெளியேறிய நூரிகள் நாடு முழுவதும் தீன சேவை புரிந்தனர்,  

கூத்தா நல்லூர் - மன்பவுல் உலா அரபுக்கல்லூரி புகழ் பெறக் காரணமாக இருந்த முஹம்மது அலி பாகவி  ஆவார். கூத்தா நல்லூரில் பைஜுல் பாக்கியாத் என்றொரு மதரஸாவும் உருவானது.

லால்பேட்டை -  மன்பவுல் அன்வார் மதரஸா அப்துர்ரஹ்மான் பாகவி ஹ்ழரத் அவர்களாலும் ஜியாவுத்தீஜ் அஹ்மது அமானி பாகவி ஹழரத் அவர்களாலும் உயர்வு கணட மதரஸாவாகும்

திருச்சி அன்வாருல் உலூம் அப்துஸ் ஸலாம் ஹழரத் பாகவி அவர்களால் உருவாக்கப் பட்ட்து,

நீடூர் நெய்வாசல் மிஸ்பாஹில் ஹுதா அரபுக்கல்லூரியை உருவாக்கிய அப்துல் கரீம் ஹ்ழரத் பாக்கியாத்தில் படித்தவரே

தமிழகத்தில் மட்டுமல்லாமல்

பெங்களூரில்  ஷபீலுர் ரஷாத் மதரஸாவைஅபுஸ்ஸுவூத பாகவி ஹழரத் உருவாக்கினார்,

கேரளா பட்டிக்காட்டில்  ஜாமியா நூரிய்யா மதரஸாவை ஈ.கே முஹம்மது அபூபக்கர் பாகவி உருவாக்கினார்.

கோழிக்கோடு காந்தபுரத்தில் ஏ.பி அபூபக்கர் அஹ்மது பாகவி மர்க்ஸ் ஸகாபத்துஸ் ஸுன்னிய்யா என்ற பிரமாண்டமான நிறுவனத்தை உருவாக்கினார். மர்கஸின் முதல் கட்டிட்த்தை பாக்கியாத்த்தின் பழைய செவ்வக கட்டிட வடிவத்திலேயே கட்டினார் 

இந்நிறுவனங்கள் மூலமாக கடந்த ஒரு நூற்றாண்டாக கணக்கற்ற ஆலிம்கள் உருவாகினர். அவர்கள் பட்டி தொட்டி எங்கும் சென்று சஆன்மார்க்கச் சேவை செய்தனர்.
யோசித்துப் பாருங்கள்! 10 பள்ளிவாசல்கள் இருந்து 5 ஆலிம்கள் தான் கிடைத்தார்கள் என்றால் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க முடியாது. 10 பள்ளிவாசலுக்கு 20 ஆலிம்கள் என்ற கணக்கில் ஆலிம்கள் இருக்கிற காரணத்தால் நிறைய பள்ளிவாசல்கள் இப்போது உருவாகின்றன.
எனவே இன்று தமிழகத்திலும் ஏன் தென்னிந்தியா முழுவதிலும் பட்டம் பெற்ற ஆலிம்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அத்தனை பேரும் அண்ணல் அஃலா ஹஜ்ரத்தின் வாரிசுகளேயாவர்.
எனவே தென்னிந்தியாவில் பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் பெருக அண்ணல் அஃலாவே காரணம் என்றால் அது மிகையானதல்ல
ஆலிம்கள் உருவாகும் போதே பேச்சு எழுத்து ஆகிய இரு துறைகளிலும் சிறப்புற்று விளங்க வேண்டும் என்று ஹழரத் நினைத்தார்கள். மாணவ்ர்களுக்கான சொற்பொழிவு எழுத்தாற்றல் குறித்து ஆரம்ப காலத்திலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டன். பிறகு இதற்காக தனி மன்றங்கள் அமைக்கப்பட்டன அவர்களின் எண்ண்ப்படியே மிகச் சிறந்த் சொற்பொழுவாளர்களின் பாரம்பரியம் ஹஜ்ரத்தின் கலைக்கூடத்திலிருந்து உருவானார்கள். இன்றும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்/
அந்தப் பேச்சாளர்கள் முஸ்லிம்கள் வாழும் நாடு நகரெங்கும் சென்று சன்மார்க்க சங்க நாதம் செய்தனர். தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களாக அன்றும் இன்றும் பாகவிகள் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு மாநாடும் பாகவிகள் இல்லாமல் நிறவடைவதில்லை. இது அஃலா ஹ்ஜரத் அவர்களின் பரகத்தின் பயனாகும். அஃலா ஹஜ்ரத் அவர்களால் உருவாக்கப் பட்ட ஒரு சமுதாயம் இன்றும் மக்களை நேரடியாக சந்தித்து மார்கத்தை சிறப்பாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது,

அன்றயை காலத்தில் சுல்தானுல் வாஇலீழ்ன் கமாலுத்தீன் பாகவி ஹழரத், ஷேக் ஆதம் ஹழரத் மணி மொழி மௌலானா கலீலுர்ரஹ்மான் பாகவி ஹஜ்ரத்  இடைய கோட்டை இஸ்ஹாக் ஆலிம் திருப்பூர் கமாலுத்தீன் பாகவி ஆரணி  கமாலுத்தீன் பாகவி , பெரிய குளம் ஷர்புத்தீன் பாகவி ஹழரத், காயல் பட்டினம் ஹைதுரூஸ் பாகவி ஹஜ்ரத்  நீடூர் சம்சுல் ஹுதா ஹஜ்ரத், கடையநல்லூர் யூசுப் அன்சாரி ஹழரத் பெங்களூரு அபுஸ்ஸுவூத் ஹழரத் ஷப்பீர் அலி ஹஜ்ரத்  பி எஸ், பி ஜைனுல் ஆபிதீன் ஹழரத் கோவை சி. வி அபூபக்கர் பாகவி ஹழரத்ஓ எம்  அப்துல் காதிர் ஹழரத்  முஹம்மது கான் ஹழரத்  கம்பம் பீர்முஹம்மது பாகவி முஹம்மது ரிழா பாகவி ஹஜ்ரத் எஸ் எஸ் அஹ்மது ஹழரத் மேலப்பாளையம் காஜாமுஈனுத்தீன் அப்துல் அஜீஸ் பாகவி ஹழரத் தஞ்சை ரபிஉத்தீன் பாகவி ஹழரத ஏரல் பீர் முஹம்மது பாகவி பௌஜ் அப்துர்ரஹீம் ஹழரத் வடகரை சாஹுல் ஹமீது ஹழரத் சென்னை சதீதுத்தீன் பாகவி ஹழரத் சேலம் அபுதாஹிர் பாகவி ஹழரத் திண்டுக்கல் லத்தீப் பாகவு துத்துக்குடி இம்தாதுல்லாஹ் பாகவி நீடுர் அப்துர்ரஹ்மான பாகவி ஹழரத் சென்னை பக்ருத்தீன் பாகவி ஹழரத் ஆகியோரும் இன்னும் பன்னூற்றுக் கணக்கானோரும் பாக்கியாத்தின் சொற்பொழிவுப் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகிறார்கள்.

பாக்கவிகளின் சொற்பொழிவு என்பது பன் முகம் கொண்ட்தாகும். மார்க்க சொற்பொழிவுகளில் மட்டும் அல்ல பொது அரங்குகளிலும் இஸ்லாமை நிலைநிறுத்தியதில் அவர்களுக்கு தனிப் பங்கு உண்டு,

சேக் ஆதம் ஹஜரத் அவர்கள் வேலூரில் நடைபெற்ற ஒரு கிருத்துவ கூட்ட்த்தை கடந்து செல்கிற போது பாதிரியார் பேசிக் கொண்டிருந்த்து ஹஜ்ரத்தின் காதுகளில் விழுந்த்து.

முஹம்மது நபி தன்னுடைய் மகள் பாத்திமாவைப் பார்த்து உன்னை என்னால் காப்பாற்ற முடியாது என்று சொன்னார்.

யேசுவோ பாவிக்ளைப் பார்த்து என்னிடம் வாருங்கள் நான் மன்னிப்புத் தருகிறேன் என்றார். அது தான் ஏசுவின் சிறப்பு என்று பாதிரி பேசினார்.

ஹஜ்ரத் அவர்கள் நேரே கூட்ட்த்திற்கு உள்ளே சென்று நான் ஒரு கருத்துச் சொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார், ஹஜ்ரத்தின் தோற்றத்தை பார்த்து மரியாதையோடு அனுமதித்தார்கள். ஹஜ்ரத் மேடையேறி சொன்னார். ஒரு டாக்டர் தன் மகளைப் பார்த்து மக்ளே நான் மருத்துவர் என்பதால் நீ எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்ளலாம் நோயை கண்டு பயப்படாமல் இருந்து விடாதே என்கிறார். இன்னொரு மருத்துவர் தன் மகளைப் பார்த்து மக்ளே உன் தந்தை நான் மருத்துவன் நீ என்னவும் செய்து கொள் உன்னை நான் காப்பாற்றுகிறேன். என்கிறார் இந்த இரண்டு மருத்துவர்களில் யார் சிறந்த மருத்துவர் என்று கேட்டார்.

முஹம்மது நபி முதல் மருத்துவரைப் போலத்தான் தன் மகளிடம் கூறினார் என்று ஹ்ஜரத் கூறியதும் கிருத்துவர்கள் வாய்டைத்துப் போயினர்.

தென்காசி அபுல் ஹஸன் ஷாதுலி பாகவி ஹழரத் அவர்கள் கிருத்துவர்களிடம் வாதம் செய்வதில் கை தேர்ந்தவ்ராக இருந்தார்.

சிலுவையை கழுத்தில் போட்டுள்ளீர்களே! ஈஸாவை கொல்ல கொலையாளிகள் பயன்படுத்திய  பொருளை நீங்கள் ஏன் மதிக்கிறீர்கள் என்று அவர் கிருத்துவ கூட்ட்த்தில் கேட்ட்தும்

அணை இருந்தால் மதகுகள் இருந்தாக வேண்டும் இல்லை என்றால் அணை  உடையத்தான் செய்யும். பாதிரிகள் பலபேர் கட்டுப்பாடுகளை உடைத்த்தற்கு காரணம் இது தான் அந்தப் பிஷப்புகளின் பெயர்களை நான் சொல்லவா என்று கிருத்துவ குருமார்களின் கூட்ட்த்தில் ஹ்ழரத் அவர்கள் கேட்ட கேள்வி மிகப் பிரபலமானதாகும்.

இதே போல இஸ்லாத்திற்கு எதிரானவர்களின் குழப்பங்களை முறியடிப்ப்பதில் காலத்தின் தேவைக்கேற்ப பாகவிகள் தம்முடைய சொற்பொழிவுகளால் சம்தாயத்திற்கு நற்சேவை புரிந்தனர்,

பட்டி தொட்டி எங்கும் சென்று இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்தில் தனி ஒருவராக ஹஜ்ரத் ஈடுபட்டார்கள். எப்போது அவரது கைப்பையில் சிறு பிரசுரங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

பலர் அவரால் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். அப்படி யாராவது இஸ்லாத்தில் இணைந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி இஸ்லாத்தில் இணைந்தவரை முதலில் குடிக்க்ச் சொல்லி அந்தப்பாத்திரத்திலேயே தானும் தண்ணீர் அருந்துவார்கள், உடனிருக்கிற மற்ற முஸ்லிம்களையும் அருந்த செய்வார்கள்.

காதியாணிகளை முறியடிப்பதில் ஈடுபட்ட 70 ஆலிம்களில் 60 பேர் பாகவிகளாக இருந்தனர்,

தமிழில் இஸ்லாத்தின் மூலாதாரங்கள்
தமிழ்ல் மார்க்க நூல்களின் மெழிபெயர்ப்புக்கள் வர வேண்டும் என ஹஜ்ரத் ஆசைப்பட்டார்கள். அதை தனது மாணவர்களிடமும் தெரிவிப்பார்கள்.
அஃலா ஹஜ்ரத்தின் ஆசை கொடுத்த உந்துதலால தான் தமிழ்ல் முதன் முறையா திருக்குர் ஆனுக்கு மொழிபெயர்ப்பை வழங்கினார். ஆகா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள். தன்னுடைய முன்னுரையில் அவர் இதைக் குறிப்பிடுகிறார்.
இதே போல திருக்குர் ஆனும்ம் விளக்க உரை தந்தவர்களில் பலரும் அஃலா ஹஜ்ரத்தின் மாணவர்களே!

தப்ஸீருல் ஹமீது என்ற பெயரில் திருக்குர் ஆன் விரிவுரையை தந்தவர்  எஸ்.எஸ் அப்துல் காதிர் பாகவி

அன்வாறுல் குர்ஆன் என்ற புகழ் பெற்ற திருக்குர் ஆன் விரிவுரையை தமிழில் தந்தவர் ஹாபிழ்; ஈ.எம் அப்துர ரஹ்மான் நூரிய்யி பாஜில் பாகவி ஆவார்.

இதே போல ஹதீஸ் நூல்களை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர்களும் அண்ணல் அஃலாவின் வழித்தோன்றல்களே
ஸஹீஹுல் புகாரியை ,மொழிபெயர்த்த எஸ் எஸ் அப்துல் காதிர் ஹஜ்ரத் அது போல பல நூல்களை மொழுபெயர் பி எஸ்கே இபுறாகீம் ஹழரத் போன்ற பலரும் அண்ணல் அஃலாவின் வாரிகளே!
பேச்சு எழுத்து ஆகிய துறைகளில் இன்று வரை அஃலா ஹஜ்ரத்தின் வாரிசுகளான பாகவிகளும் மற்ற ஆலிம்களும் மார்க்கத்திற்கு மகத்தான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அஃலா ஹஜ்ரத் அவர்களின் தனிப்பட வாழ்க்கை மிகப் பரிசுத்தமானதாகும்.
தொழுகையை கடைபிடிப்பதில் மிகவும் பேணுதலக இருப்பர்கள். வயதாகி விட்ட நிலையிலும் கூட மழைக்காலத்தில் முழங்காலை கடந்து செல்லும் தண்ணீரில் நடந்து சுபுஹ் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வந்து விடுவார்கள். நடப்பதற்கு சிரமமான போது சைக்கிள் ரிக்ஷாவில் வந்து ஜமாத்தில் கலந்து கொள்வார்கள்.
தஹஜ்ஜுதிற்கு எழுந்தால் பஜ்ர் வரை அமல்களில் ஈடுபடுவதை சாதாரண வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ் என்ற வார்த்தையைக் கேட்டால் நல்லோர்களின் இதயம் நடுங்கிவிடும் என அல்லாஹ் கூறுகிறான்.
ஒரு மாணவன் அதிக சேட்டையினால் மதரஸாவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டாண், கட்டாயமான சட்டம் இது என்று சொல்லப்பட்டது என்ன சொல்லியும் யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஒரு ஆசிரியவ்ர் அந்த மாணவருக்கு ஐடியா கொடுத்தார். நீ சென்று அல்லாஹ்விற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அந்த மாணவரும் அப்படியே சொன்னதும் அடுத்த கனமே அவரை மன்னித்து மதரஸாவில் சேர்த்துக் கொண்டார்கள் ஹஜ்ரத் அவர்கள்.
இடையில் பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்த சிலர் பொறாமை கொண்டு மதரஸாவைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் ஹஜ்ரத்தின் மீது வழக்கு பதிந்தார்கள். அப்போது ஒரு சிறு பொய்யைச் சொல்லுமாறும் அப்போதுதான் மதரஸாவை காப்பாற்ற முடியும் என்று வழக்கறிஞர் கூறினார். நீ ஏன் மதரஸா நடத்தவில்லை என அல்லாஹ் கேட்க மாட்டான். ஆனால் நீ ஏன் பொய் சொன்னாய் என அல்லாஹ் விசாரிப்பான், எனவே பொய் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள், எதிரிகளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் அல்லாஹ்வின் நாடட்ம்  ஹஜ்ரத் அவர்களே வெற்றியடைந்தார்கள்.
யாரேனும் ஆலிம்களை குறை சொன்னால் ஹஜ்ரத்திற்கு பிடிக்காது. இன்று இஸ்லாமிய அரசு இருக்குமானால் ஆலிம்கள் தான் கலெக்டர்கள் நீதிபதிகள். நீங்கள் ஒரு வக்கீலிடம் சென்று இலவசமாக சட்ட உதவி பெற்று விட முடியுமா ஆனால் ஆலிம்கள் உங்களது சந்தேகங்களுக்கெல்லம் சிறிது ம் சுய நலமின்றி மார்க்கத்தின் பதிலை கூறுகிறார்கள் என்று மக்களிடம் ஹஜ்ரத் கூறுவார்கள்.
மக்கள் ஆலிம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஹஜ்ரத் வலியுறுத்துவார்கள், தன்னை பார்க்க வருகிறவர் சும்மா பார்த்துக் கொண்டு நின்றால் நான் என்ன பொருட்காட்சியா பார்த்துக் கொண்டே இருப்பதற்கு? சந்தேகம் ஏதாவது இருந்தால் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் என்றூ சொல்லுவார்கள்.
மதரஸா அவர்கள் உருவாக்கியது தான் என்றாலும் மதரஸாவிலிருந்து ஒரு கரண்டி சர்க்கரை எடுத்தாலும் அதற்குரிய கட்டணத்தை கட்டணத்தில் சேர்த்து விடுவார்கள்,
சுமார் 70 வருடங்கள் மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றினார்கள். அதற்காக சம்பளம் எடுத்துக் கொள்ள வில்லை.
ஹஜ்ரத்தின் பூர்வீக சொத்திலிருந்த சாதாரண வருமாணத்தை வைத்து தன் சொந்த தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
ஒரு முறை ஒரு செல்வந்த 500 ரூபாய ஹஜ்ரத்திடம் கொடுத்து உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார். ஹஜ்ரத் கூறினார். மதரஸாவுக்க் கொடுங்கள் நிறையப்பேர் உங்களுக்கு துஆ செய்வார்கள் என்று கூறினார்கள்.
மாணவர்கள் பல மொழிகளிலும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் உருது பார்ஸி உள்ளிட்ட மொழிகள் பாக்கியாத்தில் கற்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
மானவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உடற்பயிற்சிகள் விளையாட்டுக்களை மதரஸாவில் அனுமதியளித்தார்கள்.
பாக்கியாத் அரபுக்கல்லூரியின் மைதானத்தின் ஒரு ஓரத்தில் உடற்பயிற்சிக்கான ஒரு பார் இருப்பதை இப்போதும் பார்க்கலாம். அது போல அதே மைதானத்தின் நடுவில் வாலிபால் விளையாடுவதற்கான இரு கம்புகளும் நீண்ட காலம் அங்கிருந்தது.
மார்க்கக் கல்விக்கா இத்தகை மாபெரும் பணிகளை தனி ஒரு மனிதரின் முயற்சியாக முன்னெடுத்துச் சென்ற அண்ணல் அஃலா ஹஜ்ரத அவர்கள் ஹிஜிரீ 1337 ரபீஉல் ஆகிர் பிறை 22 ல் 20 நாட்கள் உடல் நலமின்றி இருந்த பிறகு வபாத்தானார்கள்.
அண்ணாரின் ஜனாஸா தொழுகை வேலூர் கோட்டை மைதானத்தில் நடை பெற்றது. 12 ஆயிரம் பேர் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர் என ஜியாவுத்தீன் ஹஜ்ரத் தன்னுடைய அழகிய சரிதை என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
தொழுகைக்குப் பிறகு வேலூர் பெரிய பள்ளிவாசலின் முற்றத்தில் அஃலா ஹழரத் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
மரணத்திற்கும் பிறகும் ஹஜ்ரத் அவர்கள் தமது பர்க்கத்தை முஸ்லிம் உம்மத்திற்கு பொழிந்த வன்னமே இருக்கிறார்கள்.
அவர்கள் உருவாக்கிய பாக்கவி சமுதாயம் நாடுநகரெங்கும் மார்க்கப் பணிகளை மிகுந்த மதிப்போடு நிறைவேற்றி வருகிறது.
இன்று தென்னிந்தியாவில் இருக்கிற எந்த ஒரு ஆலிமும் அஃலா ஹஜ்ரத்தின் மாணவரின் மாணவராக அல்லது மாணவரின் மாணவரின் மாணவராகவே இருப்பார். அஃலா ஹஜ்ரத்தின் தொடர்பில் இல்லாத எந்த ஆலிமையும் தென்னிந்தியாவில் பார்க்க முடியாது.
இந்த வகையில் மட்டுமல்ல அஃலா ஹஜ்ரத் அவர்களின் பரக்கத் வேறு பல வகைகளிலும் சமூகத்திற்கு கிடைத்து வருகிறது.
அதிராம்பட்டினம் முஹம்மது குட்டி ஹஜ்ரத் கூறினார்வேலூரில் ஒரு முறை காலரா பெருகியது, மதரஸாவுக்குள்ளேயும் தொற்றியது நாங்கள் ஹஜ்ரத்தின் கபுரின் அருகே சென்று முறையிட்டு அல்லாஹ்விடம் துஆ கேட்டோம் , அடுத்த நாளிலிருந்து காலரா வேலூரை விட்டே வெளியேறத் தொடங்கியது.
எஸ் ஆர் ஷம்சுல் ஹுதா ஹஜ்ரத் அவர்கள் கூறியதை டிஜே எம் சலாஹுத்தீன் ஹஜ்ரத் கூறுனார்
“பாக்கியாத்திற்கு சென்ற ஆரம்ப கட்டத்தில் அஃலா ஹஜ்ரத்தின் கபுருக்கு சென்று அழுவேன். நான் எந்த விளக்கமு இல்லாதவனாக இருக்கிறேன் . இந்த மதரஸாவிற்கு தகுதியற்றவனாக வந்து விட்டேனோ என்று நான் அழுவேன். அல்லாஹ் எனக்கு போதிய விளக்கத்தை தந்தான்.
இப்படிச் சொன்னவர்களின் எண்ணிக்கை பல நூறைத் தொடும்.
அஃலா ஹஜ்ரத்தின் இன்னொரு மாணவர் சொன்னார். நான் சிறுவயதிலேயே சர்க்கரை நோயிக்கு ஆட்பட்டிருந்ததால் நீ குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என முடியாது என மருத்துவர் சொன்னார், நான் அஃலா ஹஜ்ரத் அவர்களின் மக்பராரை ஜியாரத் செய்த போது இதைச் சொல்லி அழுது அல்லாஹ்விடம் துஆ கேட்டேன். அஃலா ஹஜ்ரத்திடம் சொல்லிவிட்டாயல்லவா கவலையை விடு என  எனக்கு கனவில் ஒரு உஸ்தாது வந்து கூறினார். இப்போது எனக்கு மூன்று குழுந்தைகள் இருக்கிறார்கள்.   
அண்ணல் அஃலா ஹஜ்ரத அர்ர்களின் பரக்கத் அகம் புறம் என இருவழிகளும் சமுதாயத்திற்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
அன்னார் மறைந்து சரியாக ஒரு நூறு வருடம் கடந்து விட்டது.
அவர் திட்ட மிட்ட பாதையில் ஒரு மாபெரும் சமுதாயம் மார்க்கத்தின் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது.
பாக்கவிகள் செல்லும் பூமியெங்கும் சன்மார்க்கப் பயிர் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது.
ஒரு மகத்தான வாழ்க்கு இதை விடச் சிறந்த வேறு உதாரணம் ஏது?
அன்னாரின் வாழ்விலிருர்ந்து நமக்கு கிடைக்கிற பாடம்
·         உளத்தூயமை
·         உண்மையான ஈடுபாடு
·         தூர நோக்கு திட்ட மிட்ட செயல்பாடு
இம்மூன்றும் மகத்தான வாழ்விற்கான வழிகள்.
அண்ணல் அஃலாவின் அந்தஸ்தை அல்லாஹ் மேலும் அதிகரிக்கச் செய்வானாக! பாக்கியாத்தை கியாமத் நாள் வரை அன்னாரின் அடிச்சுவட்டில் நிலை பெறச் செய்வானாக! அண்ணாரின் இல்மிலிர்ந்து பயன்பெறக் கூடியவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

  

    

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    மெளலவி கோவை அ. அப்துல் அஜீஸ் பாகவி அவர்களின் Thursday, March 10, 2016 தேதியிட்ட வெள்ளிமேடை خطبة الجمعة "மகத்தான வாழ்வு எது ?" என்பதனை, மிக மிகக் காலம் தாழ்ந்து, இதோ, இன்று (30/05/21) தான் காணக்கிடைத்தது.

    அதில், கண்ணியமிக்க அஃலா ஹழ்ரத் அவர்களின் உஸ்தாதுமார்கள் பட்டியலில் கீழக்கரை மஹான்கள் கல்வத் நாயகம் மற்றும் ஜல்வத் நாயகம் அவ்ர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன.

    ReplyDelete