வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 21, 2018

இல்துமிஷ்! இப்படியும் ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.

 إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ ۚ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا (58

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
((كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤول عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْؤولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ ومَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، -قَالَ: وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ: وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ- وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ))[- البخاري ومسلم


இன்றைய இந்த ஜும்ஆ இந்தியாவின் தலை சிறந்த பேரரசர்களில் ஒருவரான ஷம்சுத்தீன் இல்துமிஷ் பற்றி நாம் கவனிக்க இருக்கிறோம்.

ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்கள் அக்கிரமக் காரர்களாகவும் தம்மிஷ்டத்திற்கு நடப்பவர்களாகவும் மக்கள் குரலுக்கு மதிப்பளிக்காதவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் மன்னராட்சி எனும் சர்வாதிகாரம் படைத்த அன்றைய மன்னர்களில் ஒரு சிலர் மகோன்னதமான் மக்கள் தலைவர்களாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் கி பி 1200 ஆண்டுகளில் இந்தியாவை ஆண்ட பெரும் மன்னரான இல்துமிஷ் அவர்கள்.

உங்களுக்கு தில்லி சென்று குதுப்மினாரை பார்க்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்றால் அந்த பரந்த மைதானத்தின் ஈசான மூளையில்  ஒரு குப்பாவுக்கு கீழே அடக்கம் செய்யப் பட்டிருக்கும் இல்துமிஷை ஜியாரத் செய்து விட்டு வாருங்கள். அவர் நீதி மிக்க பேரரசர் மட்டும் அல்ல. மிகச் சிற்ந்த ஈமானிய வாழ்க்கைக்கு சொந்தக் காரரும் கூட.

இந்தியாவிற்கு இஸ்லாம் இரண்டு திசைகளில் வந்து சேர்ந்தது.
முதலாவதாக பெருமானார் (ஸல்) அவர்களது காலத்தில் மாலிக் பின் தீனார் உள்ளிட்ட வியாபாரிகள் மூலமாக கேரளா மற்றும் தமிழகத்தின் கரையோரப் பகுதிக்கு வந்து சேர்ந்தது.

சேர மன்னர் சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி (ஸல்) அவர்கள் நிலவை பிளந்த நிகழ்வை பற்றியும்முகம்மது நபியைப் பற்றியும்இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டடார். அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மக்காவிற்கு சென்று முகம்மது நபி (ஸல்) அவர்களைச்  சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.

பின் இந்தியாவில் இஸ்லாம் மார்க்கத்தை  பரப்பும் பொருட்டு மாலிக் பின் தீனார் (ரலி)  என்பவரின் தலைமையில் பல தாஈ களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார் அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனார்  ரலி அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் உத்தரவிட்டிருந்தார்.  அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் பள்ளிவாசலைக்  கட்டினார்.  தொடர்ந்து  மாலிக் பின் தீனார் கேரளாவிலும் தமிழகத்திலுமாக40 பள்ளிவாசல்களை கட்டினார்.

தமிழகத்தில் தேங்காய்ப் பட்டினம் மற்றும் குளச்சல் போன்ற பகுதிகளில் மாலிக் பின் தீனார் பள்ளிவாசல்கள் இப்போதும் கம்பீரமாக இந்தியக் கட்டிடக் கலையின் அடடயாளத்தோடு நிற்கின்றன
.
இந்தியாவின் வட பகுதிக்கு இஸ்லாம் வந்தது. உமய்யாக்களுடைய ஆட்சி காலத்தில் ,

இஸ்லாமிய கலீபாவுக்கு சிலோனிலிருந்து அனுப்பப்பட்ட அன்பளிப்புக்களை சிந்துப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர் கொள்ளையடித்த காரணதால் அதை அடக்கு வதற்காக அபோதைய இராக்கின் ஆளுநந் ஹஜ்ஜா பின் யூசுபின் ஏற்பாட்டில் முஹம்மது பின் காஸீம் சிந்து வை கைப்பற்றிய தோடு மிகச் சிறப்பான நீதியான ஒரு ஆட்சியை கொடுத்தார்.  இது நடைபெற்றது கீ பி 700 களில
அவரது நிர்வாகத்தில் மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர். அனைத்து மக்களுக்கும் மதச் சுதந்திரம் வழங்கப் பட்டது. அதில் முஹம்மது பின் காஸீம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவரை சிறப்பாக வழி நடத்தினார்.
ஒருதடவை முஹம்மது பின் காஸிமுக்கு ஹஜ்ஜாஜ் எழுதிய கடிதத்தின் வாசகம் மிக அருமையானது.

அரசாங்கத்திற்கு நான்கு தூண்கள் உள்ளன,
1.   முதலாவது உதவியும் மன்னிப்பும் அன்பும்
2.   இரண்டாவது கொடையும் அன்பளிப்பும்
3.   மூன்றாவது எதிரிகளை கையாள்வது அறிவுடன் நடந்து கொள்ளுதல்
4.   நான்காவது எடுத்த காரியங்களில் உறுதியுடன் இருத்தல்
ஹஜ்ஜாஜின் வழித்தடத்தில்அவரது ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்த போது ஹஜ்ஜாஜ் இறந்து போனார். மத்தியில் இருந்த ஆட்சியாளர்களிடம் முஹம்மது பின் காஸிம் குறித்து தவறான தகவல்கள் தரப் பட்டதால் அவர் திரும்ப அழைக்கப் பட்டார்.

அவர் புறப்பட்டுச் சென்ற போது இந்திய மக்கள் அழுது அவரை வழியனுப்பியதாகவும் அவருடைய உருவப் படத்தை வரைந்து வைத்துக் கொண்டதாக வும் வரலாறு கூறுகிறது. (இப்னுகஸீர்)
அத்தோடு இஸ்லாமிய அரசின் அந்த வரலாறு முற்றுப் பெற்றது.
இரண்டாவதாக இந்தியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய மஹ்மூது கஜ்னவி இங்கு ஒரு நிலையான  அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
கஜ்னீ முஹ்ம்மதின் படையெடுப்புக்கள் நடந்தது கீபி ஆயிரமாவது ஆண்டுகளின் தொடக்கத்தில்

அதற்கடுத்து இந்தியா மீது படை எடுத்து வந்தவர்  சகரவர்த்தி முஹம்மது அல்கோர் (கோரி முஹம்மது) ஆவார். அவர் தான் இந்தியாவில் இஸ்லாமிய அரசாங்கத்தை நிலையாக அமைத்தவர் ஆவார்.

இந்தியாவில் ஒரு அரசை அமைத்த அவர் அதை கவனிக்கும் பொறுப்பை தன்னுடைய அடிமையும் நம்பிக்கைகுரிய படைத்தளபதியுமாக இருந்த குத்புத்தீன் ஐபெக்கிடம் கொடுத்தார்.

குத்புத்தீன் ஐய்பக் தான் இந்தியாவில் இரண்டாம் கட்ட முஸ்லிம் ஆட்சியை லாகூரை தலைமையாக கொண்டு தொடங்கியவர் ஆவார்.  தில்லி அவரது கட்டுப்பாட்டில் இருந்தது.

அவர்தான் இந்தியாவை இஸ்லாம் ஆட்கொண்டதன் அடையாளமாக தில்லியில் சிறப்பான முறையில் குவ்வத்துல் இஸ்லாம் என்ற பெயரில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். அந்தப் பள்ளிவாசலில் பாங்கு சொல்வதற்கான ஒரு பெரிய மினாராவையும் அவர் கட்டத் தொடங்கினார். அந்த மினாராதான் இன்று இந்தியாவின் பெருமைக்குரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்கிற குதுப் மினார் ஆகும்.

இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தளம் தாஜ்மஹால் அல்ல; குதுப்மினார் தான்.

Qutab Minar is the favourite destination of tourists. It is India's most visited monument

2006 ம் ஆண்டு தாஜ் மஹாலை சுற்றிப்பார்த்தவர்களின் எண்ணிக்கை 25 இலட்சம். அதே வருடம் குதுப்மினாருக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 39 இலட்சம் என விக்கீபீடியா தெரிவிக்கிறது.

குதுபுதீன் ஐபக் ஆல் குதுப்மினாரின் ஆரம்ப இரண்டு அடுக்குகளை மட்டுமே கட்ட முடிந்தது. பள்ளிவாசலுக்கான பாங்கு மினாராவாகவும் அதே நேரம் இந்தியாவில் முஸ்லிம்களின் அரசின் தொடங்கியதற்கு அடையாளமாகவும் பிரம்மாண்டமாக சிவப்பு செங்கற்களால அந்த கோபுரத்தை கட்டினார்.

குதுபுதீன் ஐபக் லாகூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தாலும் தில்லியின் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருதிருந்தார் . அதனாலாலே இஸ்லாம் இங்கு வெற்றிகண்டதன் அடையாளத்தை அவர் தில்லியில் அமைத்தார்.

குதுபுதீன் ஐபக்கின் படையில் முக்கிய பதவியில் இருந்தவர் தான் ஷம்சுத்தீன் இல்துமிஷ். அவரது சகோதரர்கள் அவர் மீது கொண்ட பொறாமையால் அவரை அடிமையாக விற்று விட்டனர். இல்துமிஷ் குதுபுதீன் ஐபக்கின் அடிமையாக அவரது படைப் பிரிவில் பெரும் பதவியில் இருந்தார்.

அவரை விடுதலை செய்த குதுபுதீன் ஐபக் அவருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார்.
குதுபுதீனுக்கு லாக் பக்ஷ் என்றொரு பெயருண்டு. காரணம் இலட்சக்கணக்கான ரூபாய்களை அவர் சர்வசாதாரணமாக தருமம் செய்வாராம்.

அவர் வீரத்தால் எதிரிகளையும் தர்மத்தால் நண்பர்களையும் அடிமையாக்கினார் என்றும் அவரது நற்பண்புகளைப் பற்றியே மக்கள் எப்போது பேசிக் கொண்டிருப்பார்கள். என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கும் பெருமானாரின் வழிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதில் தனது பங்களிப்பை முதன்மையாக வெளிப்படுத்தி விட அவர் முயற்சித்தார். மன்னராக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை விட.

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ ۚ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا (58

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
((كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤول عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْؤولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ ومَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، -قَالَ: وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ: وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ- وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ))[- البخاري ومسلم

(இன்றைய ஆட்சியாளர்களோ!  தம்முடைய அதிகாரத்தை வெளிப்படுத்தவே ஆசைப்படுகிறார்கள். நாம் கூட )

இல்துமிஷ் தன்னுடைய பெரும் சிந்தனையின் வளப்பான அடையாளமாகத்தான் அவர் குவ்வத்துல் இஸ்லாம் பள்ளிவாசலையும் அதன் மினாராவா குதுப் மினாரையும் கட்டினார்.

இப்போதும் குதுப்மினார் வளாகத்திற்கு சென்றால் அதில் ஒரு பேரரச கம்பீரம் இப்போதும் வெளிப்படுவதை காணலாம். குதுப் மினாருக்கு தன்னுடைய பெயரை அவர் சூட்டவில்லை தன்னுடைய உஸ்தாது குதுபுத்தீன் காகி அவர்களுடைய பெயரையே அவர் சூட்டினார். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் குதுப் மினார்  கட்டி முடிப்பதற்கு முன்னரே குதுப்தீன் ஐபக் இறந்து போனார். இந்தியாவின் மிக உயர்ந்த தூண் அது.

அதன் பிறகு ஆட்சி இல்துமிஷிடம் 1210 ல் வந்தது . இல்துமிஷ் தில்லியை மையமாக கொண்ட உறுதியான மகோன்னதமான தனி அரசை நிறுவினார்.

குத்புத்தீன் ஐபக் கட்டத் தொடங்கிய குதுப்மினாருக்கு மேல் மூன்று அடுக்குகளை இல்துமிஷ் கட்டி முடித்தார், அதன் பிறகு பெரோஸ் ஷா துக்ளக் குதுப் மினாரின் ஐந்தாவது அடுக்கை கட்டினார். பல சந்தர்ப்பங்களிலும் ஏற்பட்ட பூகம்பங்களைத் தாண்டி தற்போதும்  73 மீட்டர் உயரத்துடன் இந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகவும். ஸ்பெயினில் முஸ்லிம்கள் கட்டிய ஜாமி ஆ மஸ்ஜிதாக இருந்து இப்போது கத்தோலிக்க மணிக்க கூண்டாக மாறிய செல்வியா கோபுரத்திற்கு அடுத்த உயரமான பாங்கு மினாராவாகவும் குதுப்மினார் திகழ்கிறது.  

இல்துமிஷின் அரசாங்கத்தின் சிறப்பு அப்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த செங்கிஸ்கான் இந்தியாவை நோக்கி திரும்ப விடாமல் அவர் தடுத்ததாகும்.

நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இல்துமிஷ் தனது சொந்த செலவில் ஒரு கல்லூரியை நடத்தினார். அங்கு மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப் பட்டது, ஆசிரியர்களுக்கு இல்துமிஷ் தனது செலவில் சம்பளம் வழங்கினார்.

ஆட்சியாளர் நாட்டுக்கு நன்மை செய்பவராக இருந்தாலே போதுமானது. ஆனாலும் நன்மக்கள் தனது சொந்த நன்மையின் பட்டியலையும் கனப்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

பத்று யுத்தத்தின் போது மூன்று பேருக்கு ஒரு ஒட்டகை என்ற அளவில் தான் முஸ்லிம்களிடம் வசதி இருந்தது. பெருமானாருக்கு இருவர் கூட்டாளிகளாக இருந்தனர். பெருமானார் அவர்களுக்கும் வாய்ப்பளித்து தான் நடந்து சென்றார்கள்.

 كان أبو لبابة وعلي بن أبي طالب زميلَي رسول الله ، وكانت عقبة رسول الله، فقالا: «نحن نمشي عنك»، فقال: «ما أنتما بأقوى مني، ولا أنا بأغنى عن الأجر منكما»

அந்தக் கால கட்டத்தில் இஸ்லாமிய உலகில் செங்கிஸ்கானுடைய வெறியாட்டம் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்து தப்பி ஏராளமானோர் ஈரான் இராக் குராஸான் பகுதிகளிலிருந்து தில்லிக் வந்தனர். மன்னர் இல்துமிஷ் அவர்களை அரவணைத்தார். செங்கிஸ்கானை கண்டு பயப்படவில்லை. அகதிகளுக்கு பணமும் நிலமும் வழங்கியதோடு தன்னுடைய ஆறுதலையும் அவர்களுக்கு தெரிவித்தார்.

அப்போது தில்லி சர்வதேச தொழில் நகரமாக மிளிர்ந்தது என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

தனது ஆட்சிப்பகுதிக்குள் எந்த ஒருவருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதற்கென சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

மக்கள் அரசரை சந்திக்க தாமதமாகக்கூடும் என்று கருதிய அவர் அநீதிக்குள்ளானவர்கள் முறையிட ஒரு புதுவகையான ஏற்பாட்டை செய்தார், அக்காலத்து  மக்கள் வெண்மையான ஆடைகளை அணிவதே வழக்கமாக இருந்தது. அதனால் அநீதிக்குள்ளானவர்கள் அந்த ஜாமியா பள்ளிவாசலுக்குமுன் தொழுகைக்குப் பின் தில்லிவாசிகள் வழக்கமாக ஆடைக்கு மாற்றமாக வண்ணமயமான ஒரு ஆடை அணிந்து வந்தால் போதுமானது, அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று அறிவிப்புச் செய்தார்.

தனது வீட்டுக்கு வெளியே வெண்பளிங்குக் கற்களால் இரண்டு சிங்கங்களை செய்து அவற்றின் கழுத்தில் நீண்ட சங்கிலியில் மணியை கட்டிவைத்து அநீதியிழைக்கப்பட்டோர் மணியோசையை எழுப்பி தனது உறக்கத்தை கலைக்கலாம் என்றும் அறிவிப்புச் செய்தார். துன்பப் பட்டோர் இரவில் வருவார்கள். சங்கிலியை இழுப்பார்கள். மணி அடிக்கும். மண்ணர் வெளியே வந்து நல்ல தீர்ப்பு வழங்குவார்.
அது மட்டுமல்ல. இல்துமிஷ் அரசராக இருந்தாலும் ஒரு துறவியை போல நடந்து கொண்டார். இழிவான செயல் எதுவும் அவரிடமிருந்து வெளிப்பட்டதில்லை. தீய பழக்கங்களும் அவரிடம் இருந்ததில்லை.  இஸ்லாமிய கட்டளைகளூக்கு கீழ் பணிந்து ஆரம்ப கால முஸ்லிம்களைப் போல அவர் வாழ்ந்தார் என
உலக சுற்றுலாப் பயணி இப்னு பதூதா மன்னர் இல்துமிஷின் நற்பற்பண்புகளை குறிப்பிட்டுள்ளார்.

தில்லி நகரில் மக்களின் குடிநீர் தேவைக்காக ஹவ்ளே ஷம்சி என்ற தடாகத்தை இல்துமிஷ் உருவாக்கினார். தில்லி மக்கள் அனைவரும் இக்குடிநீரைப் பயன்படுத்தினர் என இப்னு பதூதா கூறுகிறார்.
இரண்டு மைல் நீளமும் பத்து மைல் அகலமும் கொண்ட பிரம்மாணமான இந்த தடாகத்தின் மேற்குப் பகுதியில் படிக்கட்டுகளும் பெரிய திண்ணைகளும் அமைக்கப் பட்டிருந்தது. அங்கு மக்கள் பொழுது போக்கிற்காக வந்து உட்காருவார்கள். தடாகத்தின் நடுவே ஒரு பள்ளிவாசலும் கட்டப் பட்டிருந்தது.
அங்கு மன்னர் அடிக்கடி தொழுகைக்கு வருவார். மக்களோடு மக்களாக நின்று தொழுகை நிறைவேற்றுவார்.

மன்னரின் ஆன்மீக ஆசான் குதுபுதீன் காகி காலமான போது அவரது இறுதிச் சடங்கில் இல்துமிஷும் அவரது மந்திரிகளும் கலந்து கொண்டனர். அப்போது ஷைகின் ஒரு உயில் படிக்கப் பட்டது. அந்த உயிலில் தனது ஆயுள் முழுவதிலும் பாவம் செய்யாதவர். அஸர் தொழுகையின் சுன்னத்தை விடாதவர் தனக்கு ஜனாஸா தொழ வைக்கட்டும் என்று கூறியுள்ளார்கள் என்ற செய்தி வாசிக்கப் பட்டது. அப்போது தான் இத்தகைய பண்போடு இருப்பதாக இல்துமிஷ் கூறினார். தான் மறைத்து வைக்க விரும்பியதை தன்னுடைய ஆசிரியர் வெளிப்படுத்தி விட்டார் என்றார் இல்துமிஷ் .

குதுபுதீன் காகி ரஹ் அவர்களுக்கு இல்துமிஷ் ஜனாஸா தொழ வைத்தார்.

இரவில் அவர் தூங்கியதை யாரும் பார்த்ததில்லை என்கிறது வரலாறு . இரவின் பெரும் பகுதியிலும் அவர் வணக்கத்தில் இருப்பார். சோம்பல் ஏற்படும் எனில் மீண்டும் ஒளு செய்து விட்டு தொழுகையில் ஈடுபடுவார். இரவு நேரங்களில் தன்னுடைய பணியாளர்களுக்கு தொல்லை தரமாட்டார் என்கிறது வரலாறு.

இரவு நேரத்தில் பக்கீரை போல் உடையணிந்து ஒரு பணியாளரை மட்டும் வைத்துக் கொண்டு தேவையுடையவர்களை கண்டறிந்து உதவி செய்வார்.

பள்ளிவாசல்களுக்கு சென்று அங்கு தங்கியிருப்பவர்களுக்கு உதவு வார். யாராவத் அவரை அடையாளம் கண்டு கொண்டால் வெளிப்படுத்தி விட வேண்டாம் என அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்.

துன்பப்படுவோர் யாரும் தன்னை நாடி வர தயங்கி விடக் கூடாது என்று கூறுவார். இதில் மதம் ஜாதி என்ற எந்த பாகுபாடும் கிடையாது என்று அறிவிப்பார்.

கியாமத் நாளில் இந்தச் சுமைகளை சுமந்து கொண்டு எப்படி நிற்க முடியும் என்று தனது அச்சத்தை வெளிப்படுத்துவார்.

அஜ்மீரிலிருந்து காஜா முஈனுத்தீன் சிஸ்தி ரஹ் அவர்கள் ஒரு குடியானவனுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக நடந்தே தில்லிக்கு வந்தார்கள். அவரை வாசலுக்கு வந்து வரவேற்ற இல்துமிஷ் இந்தக் காரியத்திற்கு சொல்லி அனுப்பியிருந்தால் போதுமே என்றார். அதற்குப் பிறகு சிஸ்தி ரஹ் அவர்களைப் பார்ப்பதற்கு தில்லியிலிருந்து இல்துமிஷே வந்து சென்றார். தில்லியை அரசாள்பவர்கள் அஜ்மீர் வந்து செல்லும் பழக்கத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இல்துமிஷ் ஆவார்.

1211 லிருந்து 25 ஆண்டுகள் தில்லியின் சுல்தானாக இருந்த இல்துமிஷ் கி.பி.1236 ஆம் ஆண்டு  மரணமடைந்தார். அவருடைய மன்னறை தில்லியின் புகழ் பெற்ற குதுப்மினார் வளாகத்தில் இப்போது பெரிய கவனிப்புகள் எதுவுமின்றி இருக்கிறது.

ஆனால் அந்தப் போரரசர் வரலாற்றின் கைகளில் மிகப் பத்திரமாக இருக்கிறார்.

அடிமையாக இருந்தவர் தனது தகுதிகளால் அரசரானார் என்பது உலகின் கவனத்திற்குரிய செய்தி. அரசராக இருந்தவர் அடிமையாகவே வாழ்ந்தார் என்பது முஃமின்களின் கவனத்திற்குரிய செய்தி.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த மன்னர், எத்தகைய பண்பாட்டுடன் மக்களுக்காக மக்களுக்கான ஆட்சியை வழங்கியிருக்கிறார் என்பதை இன்றைய ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பெரும் சோகமே மேலிடுகிறது.

சேலம் டூ சென்னைக்கு  8 வழிச்சாலை அமைக்கப் போவதாக அரசு அறிவித்து வேகமாக அதை செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகிறது, ஏற்கெனவே சென்னை செல்வதற்கு மிகச் சிறப்பான மூன்று அதிவேக வழித்தடங்கள் இருக்கிற போது புதிதாக இன்னொன்று எதற்கு என்று மக்கள் கேட்கிறார்கள். இதில் பல நூறு கிராமங்கள் அழிவதோடு தமிழகத்தின் மதிப்புமிகு சில மலைகளும் அழிந்து போகும் எனவே இந்த சாலை வேண்டாம் என அதனால் பாதிக்க்ப் படுகிற பலனூற்றுக்கணக்கான மக்கள் போராடி வருகிறார்கள்.. அரசு போராடுகிறவர்களை சிறையில் தள்ளுகிறது. மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுக்கிறது, இது விச்யத்தில் அரசு காட்டுகிற அவசரப் போக்கு தற்பொதையை ஆட்சியாளர்களுக்கு இதனால் கிடைக்கிற இலாபத்தை வெளிச்சப் படுத்தி விட்டது. 
முந்தை கால சாம்ராஜ்ய மன்னர்கள் கூட மக்களின் கருத்துக்களை கேட்கவும் அவர்களது பிரச்சனைகளை தீர்வு காணவும் அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக நாட்டின் அமைச்சர்களோ தங்களது சுயநாலபத்தை அப்பட்டமாக மக்களுக்கெதிரான ஒரு திட்டத்தை செயல்படுத்துவதில் புயல் வேகத்தில் அக்கறை செலுத்துகிறார்கள். எல்லாம் இலஞ்சம் படுத்துகிற பாடு,
ஜனநாயகப் போராளிகளை அரசு கொடூரமான சட்டங்களில் தொடர்ந்து கைது செய்து வருவது கடுமையான கண்டனத்திற்குரியது.
உண்மையான பக்தியும் பதவி என்பது மறுமையில் ஒரு பெருஞ்சுமை என்ற சிந்தனையும் அற்ற ஆட்சியாளர்கள் பூமிக்கு பெரும் சுமையே!
அல்லாஹ் நமது தேசத்தை பாதுகாப்பானாக!









1 comment:

  1. கோர்வையாக இல்லை

    ReplyDelete