வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 09, 2024

நிற்க அதற்குத் தக

 10 ம் வகுப்பு 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஒரிரு தாள்களில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் கவலைப்பட தேவையில்லை. அடுத்த முயற்சியில் வென்றுவிடலாம். வாழ்க்கையில் மிகப்பெரும் வெற்றி பெற்ற பலர். பல முறை தோற்ற பிறகு தான் வெற்றியை சந்தித்திருக்கிறார். தாமஸ் ஆல்வா எடிசன் முன்னூறு தடவை தோற்ற பிறகு தான் மின்சார பல்பை கண்டு பிடித்தார்.

வெற்றி பெறாத மாணவர்களுக்கு முதலில் பெற்றோர்கள் ஆறுதல் கூற வேண்டும். முந்தைய வெற்றிகளை நினைவு கூற வேண்டும்.

உஹது யுத்தத்தில் தோல்வியுற்ற சந்தர்ப்பத்தில்தான் பத்ரு யுத்தத்தில் வெற்றி பெற்றதை அல்லாஹ் நினைவூட்டினான்.

. ولقد نصركم الله ببدر وأنتم أذلة 

வெற்றி பெற்ற மாணவர்கள் சிறப்பான மேற்படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைய அடிப்படை கல்வி அல்ல. சிறப்பான கல்விதான் இப்போதைக்கு தேவைப்படுகிறது.  எந்த ஒரு பணியாக இருந்தாலும் “டிகிரி” கேட்கிறார்கள். 

அதே போல அடிப்படையான மரியாதைக்கும் டிகிரி தேவைப்படுகிறது.  என்ன படித்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஏதாவது ஒரு டிகிரியை சொன்னால் தான் மதிப்பு. இல்லை என்றால் கீழ் நிலையில் வைக்கப்படுகிறோம். மாப்பிள்ளையாகும் போதோ மணப் பெண்ணாகும் போதோ கூட டிக்ரி இருந்தால் தான் மரியாதையாகிறது.

எனவே உயர் கல்வி வாழ்வாதாரத்திற்கும் மரியாதையான வாழ்விற்கும் அத்தியாவசியமானது.

இஸ்லாமின் வழிகாட்டுதலின் படி மூன்றாவதாக சிறப்பான இஸ்லாமிய வாழ்க்க்கும் உயர் கல்வி அவசியமானது.

அல்லாஹ் திருமறையில் கல்வியை அதிகமாக கொடு என்று பிரார்த்திக்குமாறு பெருமானாருக்கு உத்தரவிட்டான்.

وقل رب زدني علما

 காசு பணம், அதிகாரம், அந்தஸ்த்து என எதையும் அதிகமாக தேட அல்லாஹ் பெருமானாருக்கு சொல்லவில்லை. கல்வியை அதிகமாக கேட்க உத்தரவிட்டான். எனவே ஒரு சிறப்பான இஸ்லாமிய வாழ்வு என்பது உயர்ந்த கல்வியை பெறுவதில் முழுமையடைகிறது.

பெரிய செல்வந்தனாவது, அல்லது பெரிய தாதாவாக ஆவது, அல்லது பெரிய தாயி ஆவது, அல்லது பெரிய சமுக சேவகனாவது என எந்த பெரிய சிந்தனைக்கு முன்னதகாவும் முடிந்த வரை உயர் கல்வியை பெற்றவராக வேண்டும் என்று எந்த இஸ்லாமிய இளைஞனும் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக பெற்றோர்கள் தங்களுடைய வியாபாரம் , பண வசதி, அதிகார பலம், என்ற எந்த பின்புலத்திலும் தங்களது பிள்ளைகளை உயர் கல்வி பெறாமல் போய்விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த 2023 ம் ஆண்டு தி ஹிந்து தமிழ் பதிரிகை வெளியிட்ட ஒரு கட்டுரை முஸ்லிம் சமூகத்திற்கு சீல அதிர்ச்சிகரமான தகவல்களை தருகிறது.

உயர் கல்வி பெறுவதில் முன்பை விட இப்போது நிலை பரவாயில்லை என்ற ஒரு மனோபாவம் முஸ்லிம்கள் பலரிடமும் இருக்கிறது.

ஆனால் அந்தக் கட்டுரை இந்தியாவில் இன்றைய முஸ்லிம்களின் உயர் கல்வி நிலை  இந்திய மக்களின் சராசரி கல்வி சதவீத்த்தை விட சரிந்திருப்பதாக புள்ளிவிபரங்களோடு சுட்டிக் காட்டுகிறது.

நமது நாட்டில் தொடக்க பள்ளி  கல்வியை தாண்டி உயர் நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பொதுவாக 70 சதவீதமாக உயர்ந்திருக்கிற போது முஸ்லிம்களில் அது 59 சதவீதமாக இருக்கிறது.

முஸ்லிம்களில் 4.9 சதவீதம் பேர் தான் பட்டப்படிப்புக்காக பல்கலை கழகங்களில் இணைகிறார்கள்.

இந்த புள்ளிவிபரம் தருகிற முதல் அதிர்ச்சி

உயர் கல்வி பெறுவதில் முஸ்லிம்களான நாம் பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை விட பின்னணியில் இருக்கிறோம்.

அந்த அறிக்கை கூறுகிறது.  

இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் இஸ்லாமிய மாணவர்களின் விகிதம், 2020-21-ல் எஸ்சி, எஸ்டி-யினரின் விகிதத்தைவிட குறைந்துள்ளது.

இந்த் அறிக்கை தருகிற மற்றுமொரு அதிர்ச்சி

கல்வியில் முஸ்லிம்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிற இப்போதைய கால கட்டத்தில் நமது நம்பிக்கை பொய்யானது என்று அந்த் ஆய்வு கூறுகிறது.

முஸ்லிம்களின் உயர் கல்வி பெறும் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் முன்பை விட சரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கூட.

தி ஹிந்து கூறுகிறது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய AISHE-ன் கணக்கெடுப்பின்படி, 2020-21-ல் உயிர் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் 8% குறைந்துள்ளனர். அதேநேரத்தில், ஓபிசி பிரிவு 4 சதவீதமும், எஸ்சி பிரிவு 4.2 சதவீதமும், எஸ்டி பிரிவு 11.9 சதவீதமும் உயர்ந்துள்ளது.  இந்த ஆண்டில்  பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர் கல்வி பயில சென்ற இஸ்லாமிய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 79 ஆயிரம் மட்டுமே.

உத்தரப் பிரதேசத்தில் 36 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 26 சதவீதமும், மகாராஷ்ட்டிராவில் 8.5 சதவீதமும், தமிழகத்தில் 8.1 சதவீதமும் இஸ்லாமிய மாணவர்களின் உயர் கல்வி விகிதம், அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் சரிந்துள்ளது.

கேரளாவில் மட்டுமே இஸ்லாமிய மாணவர்களின் உயர் கல்வி விகிதம் 43% என்ற நல்ல நிலையில் உள்ளது. (தி ஹிந்து மே 23)

நமது சந்ததிகள் கல்வியறிவு பெறுவதை பொறுத்தே நமது குடும்பத்தின் மரியாதை அமையும். அதே போல நமது நாட்டில் நமக்கான மரியாதை என்பது நமது சந்த்திகள் கல்வியறிவு பெற்று சிறப்படைவதை பெருத்தே அமையும்.

அதுவும் சராசரியான கல்வியறிவு போதுமானது அல்ல; சாதனையான கல்வியறிவு இன்றைய அவசியமாகும். ஆராய்ச்சி படிப்புகள், திறன் மிகு பட்டங்கள் (புரபஸனல்) இன்றைய தேவையாகும்.

அப்துல் காலாம். ஒரு உதாரணம் போதும். சைக்கிளில் பேப்பர் போடுபவராக இருந்த சிறுவர் பின்னால் இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார் என்பது மட்டுமல்ல. உலக மக்களின் நேசிப்பிற்குரியவராகவும் இருந்தார். காலில்லாதவர்களுக்கு மரக்கட்டையில் செயற்கை கால் பொருத்தப்படுவது வாடிக்கையாக இருந்தது. அப்துல் கலாமின் கண்டுபிடிப்புக்களின் ஒன்றாகத்தான் இப்போது எடை குறைவான செயற்கை கால்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒரு ஆய்வாளர் அவரது வாழ்க்கையை எந்த தரத்திற்கு உயர்த்திக் கொண்டு போகிறார் என்பது மட்டுமல்ல. அவரால் மனித சமூகம் எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பதையும் சிந்தித்துப் பார்த்து நாம் ஊக்கம் பெற வேண்டும்.

திருக்குர் ஆன் வெற்றி பெறுவதற்கு ஒரு பார்முலா சொல்கிறது.

فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى

 

தன்னிடமிருந்ப்பதை கொடுப்பவர்கள், தவறான செயல்களை தவிர்த்துக் கொள்கிறவர்கள், நல்லவிசயங்களை ஒப்புக் கொள்ப்வர்கள் வெற்றியடைவார்கள் என்பது இதன் பொருள்/

மிக அற்புதமான செய்தி இது,

நாம் கொடுப்பவர்களாக இருந்தால் தான் சமூகத்தில் உயர முடியும்.

இது வெள்ளிடை மலை என தெரிந்த உண்மை

நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பிறகுண்டான சந்தோஷத்திற்காகவும்  வாழ சொன்னார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله تعالى عنه: أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَإِذَا مَاتَ ابنُ آدم انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ، أو عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ. رَوَاهُ مُسْلِمٌ.

 

மற்ற எதையும் கொடுப்பதை விட கல்வியை கொடுப்பதே மிகப் பெரிய கொடையாகும்.

மின்சாரத்தை கண்டு பிடித்துக் கொடுத்த ஒருவர், தொலை பேசியை கண்டு பிடித்துக் கொடுத்த ஒருவர், தடுப்பூசிகளை கண்டு பிடித்துக் கொடுத்த ஒருவர், மனித சமூகத்திற்கு எத்தகைய பெரிய நன்மைகளை செய்திருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமது இஸ்லாமிய பாரம்பரியம் என்பதும் மனித சமூகத்திற்கு இத்தகைய உயர்வான அறிவியல் செய்திகளை முன் கூட்டியே கண்டு சொன்ன பாரம்பரியமாகும்.

இப்னு ஹஜர் அல் ஹைதமி ஹிஜ்ரி 974 மரணமடைந்தார். அதாவது இன்றிலிருந்து சுமார் 500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்.

அவர் தனது நூலில் ஒரு ஆணின் விந்தனு வெளியே எடுக்கப்பட்டு அவரது மனைவியின் வயிற்றில் செலுத்தப்படுமானால் – அப்போது அவ்விருவருக்கும் இடையில் திருமண உறவு இருக்குமானால் அதில் பிறக்கும் குழந்தை அந்த தந்தையை  சாரும் என்று சட்டம் கூறினார்.

அப்போது அவரது சமூகத்தில் வாழ்ந்த அறிவியலாளர்கள் அதை கேலி செய்தனர். விந்து வெளியே எடுக்கப்பட்டால் காற்று அதை வீணடித்து விடும். அதனால் அதன் வீரியம் கெட்டு விடும். குழந்தை தரிக்காது என்றனர்.

ஆனால் அப்போதே அவர்களுக்கு பதிலளித்த இப்னு ஹஜர் அல் ஹைதமீ அவர்கள் இவ்வாறு நடப்பதற்கு சாத்தியம் உண்டு என்று எழுதினார்.

இது போல ஒன்றல்ல இரண்டல்ல பல நூற்றுக்கணக்கான அறிவியல் புதுமைகளை முஸ்லிம்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாறு மனித சமூகத்திற்கு கொடுப்பவர்கள் தான் சமூகத்தின் பெரிய மரியாதையை நிலையாக பெற முடியும்.

அதனால் சிறப்பான உயர் கல்வியை பெற நமது இளைய தலைமுறை முயற்சி செய்ய வேண்டும். பெற்றோர்கள் அதற்கு ஆர்வமூட்ட வேண்டும். அதற்கான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சிறப்பான திறமை வாய்ந்த மாணவர்கள் உயர் கல்வியை பெற முடியாத ஏழ்மையில் இருப்பார்களானால் அவர்களுக்கு சமூதாயம் உதவ வேண்டும்.

இளைய சமுதாயம் உயர் கல்வியில் கற்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு அடுத்ததாக இன்றைய இந்த ஜும் ஆவில் பிரதானமாக நாம் முன்வைக்க விரும்புகிற கருத்து,

நமது கல்வி பயனளிக்க வேண்டும் என்பதாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களி அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிய விசயங்களில் ஒன்று கல்வி பயனற்று போய்விடக் கூடாது என்பதாகும்

روى الإمام مسلم في صحيحه من حديث زيد بن أرقم رضي الله عنه

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا)

  கற்றபடி செயல்பட வேண்டும் என்று இதற்கு வழக்கமாக ஒரு பெருள் கொள்ளப்படுவது உண்டு

அதற்கப்பால் இதற்கு இன்னொரு கருத்தும் உண்டு. கற்ற கல்வியை அப்படியே விட்டு விடுவதும் கூடாது.

இன்று நம்முடைய தலைமுறையில் பலர் பல துறைகளிலும் டிகிரி பட்டம் பெற்றுவிட்டு வேறு வேலைக்கு போய்விடுகிறார்கள்.

கொஞ்சம் முயற்சி செய்தால் அவர்கள் படித்த துறையிலேயே அவர்களால் ஜொலிக்க முடியும்.

எளிதாக இருக்கிறது என்று தந்தையின் தொழிலை கவனிக்க, அல்லது அதிகமாக  சம்பாதிக்க , அல்லது வெளிநாட்டு வேலைகள் என்று சென்று விடுகிறார்கள்.

மருத்துவம் படித்து விட்டு தந்தையின் ஆயில் பாக்டரியை கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரை நான் சமீபத்தில் சந்தித்தேன்.  

இது போன்ற நடவடிக்கைகள் ஒரு பெரிய இழப்பாக அமைந்து விடுகிறது.

இதில் பெரிய நஷடம் என்ன வெனில் அடுத்து வருகிற தலைமுறைக்கு முன்னோடிகள் கிடைக்காமல் போய்விடுகிறார்கள்

இன்றைய முஸ்லிம் இளைஞர்களுக்கு பெரிய சோதன என்ன வென்றால் அவர்கள் படித்து டிக்ரி பெற்று வெளியே வருகிற போது அவர்களது குடும்பத்திலோ அல்லது தெரிந்தவர்களிலோ இப்படி வா என்று அழைத்துச் செல்பவர்கள் இல்லை.

இதே ஒரு பிராமண குடும்பமாகவோ அல்லது கிருத்துவ குடும்பமாகவோ இருந்தால் பிகாம் படித்து விட்டு வருகிற பிரஷ்ஷருக்கு இப்படி நீ முயற்சி செய் என்று வழிகாட்டுபவர்கள் இருக்கிறார்கள்.

நமது முஸ்லிம் சமூகத்தில் முன்னால் பட்டம் பெற்ற பட்டதாரிகள் அவர்கள் படித்த துறைகளில் தொடர்ந்து செயல்படாததால் அத்தகைய வழிகாட்டுதலை தர முடிவதில்லை.

இது அடுத்து வரும் தலைமுறையை பாதிக்கிறது.

நம்முடைய முன்னோர்கள் அவர்கள் எந்த துறையில் இறங்கினார்களோ அந்த துறையில் இறுதி மூச்சு வரை பாடுபட்டார்கள்.

சுப்யான் அத்தவ்ரீ ரஹி ஒரு பெரும் சட்ட அறிஞர். அவர் மரணப் படுக்கையில் இருந்த போது அவரைப் பார்க்க சிலர் வந்தனர். அவர்களிடம் அவர் அந்த நிலையில் கேட்டார். : நாம் அன்று பாட்டனாருக்குரிய சட்டம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார்.

இந்த நிலையில் அதைப்பற்றி ஏன் கேட்கிறீர்கள் என்று வந்தவர் கேட்டார். இல்லை நான் அதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் எந்று தவ்ரீ ரஹ் கூறீனார். அந்த சட்டத்தை வந்த நண்பர் எடுத்துக் கூறவும் தன் தலையணைக்கு கீழே இருந்த பேப்பர் பேனாவை எடுத்து தவ்ரீ ரஹ் குறித்துக் கொண்டார். 

அவரைப் பார்க்க வந்தவர்கள் கூறினார்கள். நாங்கள் அவரிடமிருந்து விடை பெற்று வெளியேறிக் கொண்டிருந்தோம் . அப்போது வீட்டுக் குள்ளிருந்து இன்னாலில்லாஹ் சப்தம் பெரிதாக கேட்டது. சுப்யான் அத்தவ்ரீ மரணித்து விட்டிருந்தார்.

தனது இறுதி மூச்சு வரை சட்டம் பற்றிய தெளிவை தேடுவதில் ஈடுபட்ட சுப்யான் அத்தவ்ரீ வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எனவே எந்த துறையில் கல்வி கற்றோமோ அந்த துறையிலேயே தொடர்ந்து ஈடுபட இளைஞர்கள் முயல வேண்டும்.

அது அவர்களை சாதனையாளர்களாக ஆக்கும்.      

ஒரு பெயருக்காக மட்டும் டிகிரி வாங்குவது என்ற மனப் போங்கு நம்மை பெரிய உயரங்களுக்கு கொண்டு சேர்க்காது.

அது பயன்ற்ற கல்வி ஆக ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது.

எனவே படித்த துறையில் தொடர்ந்து ஈடுபடவும் முன்னேறவும் இன்றைய இளைய சமுதாயம் ஆர்வம் செலுத்த வேண்டும்.  பெற்றோர்களும் அதில் ஆர்வம் ஊட்ட வேண்டும்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்று வள்ளுவன் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அது அவர்களையும் மேம்படுத்தும், சமுதாயத்திற்கும் உதவியாக அமையும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment