வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 20, 2024

முன்யோசனை அற்ற செயல்கள்

திருக்குர் ஆன் மிக அற்புதமான ஒரு வேதம். அதன் சொற்களில் ஆழம் மிக அதிகம்.

அதற்கு ஒரு உதாரணம் ஹஜ் பற்றிய வசனம்

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ

 இதிலுள்ள مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ என்பதற்கு பலரும் பண வசதி என்று மட்டும் அர்த்தப் படுத்திக் கொள்கிறார்கள்.

 அப்படி அல்ல, ஹஜ்ஜின் பாதையில் செல்ல சக்தி பெறுவது என்ற பொருளில் பல அர்த்தங்கள் இருக்கின்றன.

 தற்போது இந்த ஆண்டிற்கான ஹஜ் முடிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஹஜ் செய்த பலரும் தங்களுக்கு அதிக சிரமம் ஏற்பட்டிருப்பதாக புலம்புவதை காண முடிகிறது.

 உண்மையில் இது இந்த வசனத்தின் பொருளை புரிந்து கொள்ளாமையின் விளைவாகும்.   

இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்திருந்த பலரும் சில இடங்களில் அதிக சிரமத்திற்கு உள்ளாயியினர்.

அந்த சிரமங்கள் எப்போதும் இருக்க கூடியவை தான். ஆனால் அவற்றை எதிர்பார்க்காத்தால் ஹாஜிகளுக்கு அது பெரும் சுமையாக தெரிந்தது.

முதலாவது நடை,  ஹஜ்ஜின் நாட்களான துல் ஹஜ் 9, 10,11, 12 ஆகிய நாட்களில் தினமும் தலா 15 கிலோமீட்டர் அளவுக்கு நடந்தே ஆகவேண்டு.

வாகனங்கள் எதுவும் கிடைக்காது. அதாவது இந்த பகுதிகளில் வாகன நடமாட்டம் இருக்காது.  

சவூதி அரசு முழுக்க நெரிசல் நிர்வாம் (கிரவுட் மேனேஜ்மெண்ட்) என்ற திட்டடத்தின் அடிப்படையில் முன்னர் கிடைத்து வந்த பல வசதிகளை ரத்து செய்து விட்டது. சில வழிகளை அடைத்து விட்டது. நீங்கள் மினாவில் எந்த இடத்தில் டெண்ட் பிடித்திருந்தாலும் முஜ்தலிபாவிலிருந்து மினாவிற்கு வரவும், மினாவில்  சைத்தானை கல்லடித்து விட்டு திரும்பவும் குறைந்தது 6 கிலோ மீட்டர்கள் நடந்துதான் வந்தாக வேண்டும். இந்த  இடங்களில் வீல் சேர் தள்ளுவதற்கு ஆட்கள் கூலிக்கு கிடைக்கமாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்கள் தான் அதை கவனிக்க வேண்டும். இந்த ஆண்டு வெப்பம் 48 டிகிரியை எட்டிப்ப் பிடித்திருந்த்து . அந்த வெப்பத்தை சமாளிப்பது பெரும் பிரச்சனையாக இருந்தது.

எனவே நடை என்பது அதுவும் வெயிலை தாங்கிக் கொண்டு நடப்பது என்பது ஹாஜிகளுக்கு ஒரு சவாலான வேலை தான்.

ஹாஜி அதற்கு தயாராகவே இருந்திருக்க வேண்டும்.

அதற்கான திறன் இல்லாத நிலையில் வந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டார்கள்.

எனவே இனி வரும் காலங்களில் இதற்கான ஆரோக்கியம் உள்ள நிலையிலேயே ஹஜ்ஜு செய்து விட வேண்டும்.

இரண்டாவது பிரதான பிரச்சினை வழிகாட்டுதல்கள் கிடைக்காதது.

ஹஜ் கமிட்டியில் வந்திருப்பவர்கள் எதை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்பதில் தேவையான வழிகாட்டுதல் கிடைக்காத போது பிரச்சினைகளுக்கு உள்ளானார்கள். தவாபுழ் இபாழாவுக்கு புறப்படுவதில் அது போல தவாபை முடித்துக் கொண்டு மீண்டும் மினாவுக்கு திரும்புவதில் அவர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரந்தது. அவர்களுக்கு போதுமான அளவில் வழிகாட்டுவோர் இருக்க வில்லை.

இது பொதுவான அரசு ஹஜ் கமிட்டிகளின் குறைபாடு தான். பொதுவாக ஹஜ் கமிட்டியின் மூலம் வாலண்டியர்கள் என்ற பெயரில் பல நூற்றுக்கணக்கானோர் இலவசமாக ஹஜ்ஜுக்கு அனுப்ப பட்டாலும் அவர்களில் பெரும்பாலோர் செல்வாக்கால் இடம் பிடித்தவர்கள் என்ற வகையில் ஹாஜிகளுக்கு வழிகாட்டுபவர்களாக இருப்பதில்லை. பலருக்கும் அதற்கேற்ற அனுபவம் இருப்பதில்லை.

இதில் இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும் ஒவ்வொரு ஆண்டும்  .சவூதி அரசின் நடைமுறைகள் பெரும் மாற்றத்திற்குள்ளாகின்றன. அவற்றை புரிந்து கொள்வதில் தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்களுக்கும் கூட இந்த பிரச்சனைகள் ஊண்டு.

மூன்றாவது கட்டணங்கள்,  ஒரு சில கிலோ மீட்டர்களை கடப்பதற்கு பல் ஆயிரம் ரூபாய்கள் கட்டணமாக கேட்கிறார்கள் என்று பலரும் வருத்தப்படுகிறார்கள். இதில் பலனேதும் இல்லை.

விழாக்களில் கட்டணங்கள் தாறுமாறாக உயரும் என்பது எல்லா இடங்களிலும் உள்ள நடை முறைதான். அங்கு வசிப்பவர்களுக்கு அதுதான் பிரதான வருமானமாக இருக்கும். இன்னொன்று அந்த காலகட்டத்தில் சில கிலோமீட்டர்களை கடக்க பல மணி நேரங்கள் பிடிக்கும். இதனால் கட்டண விகிதம் இரண்டு ரியால் என்றிருந்தது இருநூறு ரியால் என்று மாறுவது எப்போதும் நடப்பது தான். புதிதாக வருகிற ஹாஜிகளுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம்.

இந்த மூன்று சிரமங்களை தவிர்த்து உணவு தட்டுப்பாடு, அல்லது தண்ணீர் பற்றாக்குறை, பாத்ரூம்கள் கிடைக்காமை அல்லது மருத்துவ உதவிகள் கிடைக்காமை போன்றவை பெரிதாக இருக்காது.     

இந்த மூன்று சிரமங்களும் ஹஜ்ஜில் எதிர்பார்க்க கூடியவைகளே! இது பற்றிய முன் கூட்டிய சிந்தனை இல்லாமல் போவதும், தயார் நிலையில் இல்லாதிருப்பதும், அல்லது போதிய வலுவற்று இருப்பதுமே பிரச்சனைகளுக்கான காரணங்களாகும்.

எனவே இனி வரும் காலங்களில் ஹஜ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மிக நிச்சயமாக சில தெளிவான யோசனைகளுக்குப் பிறகு தான் ஹஜ்ஜுக்கு திட்டமிட வேண்டும்.

من استطاع اليه سبيلا

என்ற திருக்குர் ஆனிய வசனத்திற்கு இதுவே பொருளாகும்.  

ஹஜ் 5 நாட்களில் நடை பெறுகிற வணக்கம் என்றாலும் அதில் அதிகமாக நடக்க வேண்டியது வரும். அதுவும் ஓரிரு நாட்கள் நடை கடுமையாக இருக்க வேண்டும். அதிக ஓய்வு எடுப்பதற்கு நேரம் இருக்காது.

இதற்கு நாம் நம்மை முன் கூட்டியே தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

முற்காலத்தில் அரபா மக்காவிலிருந்து 21 கிமீ தூரம் என்றால் அந்த தூரத்தை நடந்தே கடந்தார்கள். ஒரு 36 மணி நேரத்தில் 21 கீமி போகவும் 21 கீமி திரும்பி வரவுமான தயார் நிலையில் மக்கள் இருந்தார்கள். ஒட்டகங்களை வைத்துக் கொள்ளும் வசதி என்பது எல்லோருக்கும் இருக்கவில்லை. இப்போதிருப்பது போன்ற தண்ணீர் மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் அப்போது இருக்க வில்லை. பேருந்துகள் வந்த பிறகு கொஞ்சம் சவுகரியம் கிடைத்தது என்றாலும் கூட்டம் பிரம்மாண்டமாகிற போது பேருந்துகளின் நடமாட்டமும் சிரமத்திற்குரியதாகிவிடுகிறது.  

இப்போது பேருந்து, மற்றும் ரயில் வசதிகள் இருந்தாலும் கூட கூட்டத்தை  சமாளிப்பதற்காக அதிகம் நடக்க வேண்டியதாக இருக்கிறது .  

ஹஜ் பயணம் புறப்படுகிறோம் என்றதும் அந்தப் பெருமைக்கான மற்ற வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தி விட்டு நடைப் பயிற்சியில் கவனம் செலுத்தாவிட்டால் உண்மையில் ஹஜ்ஜில் அத்தகையோர் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாவார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு தகுந்த துணையை அனுப்பி வைக்காவிட்டால் அது பெரும் சோதனையாக அமைந்து விடும். அத்தகையோர் பர்ளுகளை யும் வாஜிபுகளையும் கூட தவற விட்டு விடுகின்றனர். எப்படியாவது இந்த நாட்கள் நகர்ந்தால் போதும் என்ற மனோநிலைக்கு வந்து விடுகின்றனர்.

இத்தகைய ஹஜ்ஜினால் என்ன பயன் என்று நாம் யோசிக்க வேண்டும்.   

திருக்குர்ஆன் முன்னேற்பாடுகள் குறித்து நமக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளது.

وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل

 

இது யுத்தம் சம்பந்தமாக பேசுகிற வசனம் என்றாலும் கிட்ட்த்தட்ட அதற்கு நிகரான ஒரு வணக்கமே ஹஜ்ஜும் ஆகும்.  இஸ்லாத்தில் சிறந்த காரியமாக ஜிஹாதுக்கு அடுத்து ஹஜ்ஜை பெருமானார் (ஸல் ) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

நமது சக்தியை வலுப்படுத்தி கொள்வது, வாகன ஏற்பாடுகளையும் சரிப்படுத்திக் கொள்வது என்று இந்த வசனம் அறிவுறுத்துகிறது.

வாகனங்களில் கட்டண உயர்வு பற்றி கவலைப்படுகிறவர்கள், மிகவும் நெருக்கடியான நேரங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இது பற்றியும் ஒரு முன் யோசன்னை இருக்க வேண்டும்.

அனுபவஸ்தர்களிடம் முன் கூட்டி விசாரித்திருந்தால் இந்த கட்டண உயர்வு பற்றி தகவல் நிச்சயம் கிடைத்திருக்கும்.

10,11,12 ஆகிய நாட்களில் சைத்தானை கல்லெறிந்து விட்டு மினா கூடாரத்திற்கு திரும்பிச் செல்வது என்று மட்டும் முடிவெடுத்திருந்தால் வாகனங்களின் கட்டணத்தைப் பற்றி கவலை பட தேவையிருக்காது.

இந்த நாட்களில் ஹஜ்ஜின் தவாபிற்காக மக்காவிற்கு செல்ல வேண்டும் என்று திட்டமிடுகிற போது கட்டணம் மக்களை பாடு படுத்துகிறது.

ஹஜ்ஜின் தவாபை பொறுத்தவரை ஹனபி மத்ஹபில் 12 ம் நால் அஸருக்க்ள் செய்வது சிறப்பு என்றாலும் அது எல்லை கிடையாது. அதற்கு பின்னரும் கூட அந்த தவாபையும் சஃயையும் செய்து கொள்ள முடியும். ஷாபி மத்ஹபில் அப்படி எந்த நேர குறிப்பும் இல்லை.  ஊருக்கு புறப்படுவதற்கு முன் அந்த் தவாபை செய்து விட வேண்டும். அவ்வளவு தான்.

வண்டிக்கான கட்டணமோ அல்லது உடல் வலுவோ பிரச்சனையாக இருக்கும் ஹாஜிகள் இந்த கடமையை பிற்படுத்திக் கொள்ளலாம்.

12 ம் நாள் சைத்தானை கல்லெறிந்து முடிந்தவுடன் தங்களுடைய இருப்பிடத்திற்கு திரும்பிய பிறகு ஹஜ்ஜின் தவாபை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் அப்போதும் கூட கட்டணம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். இலட்சக் கணக்கில் ஹஜ்ஜுக்காக செலவழிக்கும் போது இதற்காக சில ஆயிரங்கள செலவழிக்க தயங்குவது அல்லது புலம்புவது பொருத்தமாகாது. ஹஜ்ஜின் செலவுகளில் குர் பானியின் செலவை போல ஹஜ்ஜுடைய நாட்களில் டாகஸி கட்டணங்களையும் தனியாக எடுத்து வைத்து விடுவதுதான் நிம்மதியளிக்க கூடியது.

எனவே இந்த ஆண்டு ஹஜ்ஜு செய்த ஹாஜிகள் சில பேர் சமூக ஊடகங்களில் புலம்புவதை கேட்கிற மக்கள், ஹஜ்ஜின் மீதோ அதன் நடைமுறைகள் மீதோ விரக்தியடையக் கூடாது. மாறாக சரியான கால கட்டத்தில் சரியான முன்னேற்பாட்டுடன் பயணம் செய்ய வேண்டும் என்பதை தான் உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும்.

அன்பானவர்களே இன்றைய சூழலில் ஹஜ் பயணம் என்பதை ஒரு பரவச பயணமாக செய்தால் மேகொண்டால் அது சரியானதாகாது.

அதற்கு தேவையான திட்டமிடுதல்களை முன் கூட்டியே மேற்கொள வேண்டும்.

திட்டமிடுதல் அல்லாஹ்வின் இயல்பு என்கிறது குர் ஆன்

يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْأَمْرَ 

அல்லாஹ் மலக்குகளை பாராட்டுகிறான். அவர்கள் திட்டமிட்டு செயல்படுவார்கள் என்கிறான் .


فَالمْـُدَبِّراتِ أَمْرَاً

அலி ரலி அவர்கள் கூறினார்கள்

நல்ல திட்டமிடுதல் குறைவான செல்வத்தை வளர்க்கிறது.

"حُسنُ التَّدبيرِ يُنمِي قليلَ المالِ

 நமது திட்டமிடுதல்களை சரியாக அமைத்துக் கொள்ளும் போது பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளை தடுமாறாமால சமாளிக்க முடியும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது உயிருக்கு மக்காவில் ஆபத்து ஏற்பட்ட போது, அவர்களது தலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட போது முஹம்மது நபி ஸ்ல் அவர்கள் மக்காவை விட்டு தப்பிச் சென்றார்கள்.

அப்போதும் திட்டமிட்டு செயலாற்றினார்கள்.

 

மதீனாவின் பாதையில் நேரடியாக விரைந்து செல்ல வில்லை. மக்காவின் ஒதுக்குப் புறத்தில் உள்ள சவ்ரு குகையில் மூன்று நாட்கள் ஒளிந்திருக்க திட்டமிட்டார்கள்.

 

தன்னுடைய ஒட்டகைகளை உடன் வைத்துக் கொள்ளவில்லை .அவற்றை அப்துல்லாஹ் பின் அரீகத் என்ற வழிகாட்டியிடம் கொடுத்து மூன்று நாட்கள் கழித்து தவ்ருக்கு கொண்டு வரச்  சொன்னார்கள்.

 

அபூபக்கர் ரலி அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் அவர்களை மக்காவாசிகளைப் பற்றிய செய்திகளை கொண்டு வர ஏற்பாடு செய்தார்கள்.

 

ஆமிர் பின் புஹைரா என்ற அபூபக்கர் ரலி அவர்களின் அடிமையை பால் கொண்டு வந்த கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

அபூபக்கர் ரலி அவர்களின் மகள் அஸ்மா ரலி அவர்களை தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

 இந்த திட்டமிட்ட ஏற்பாடுகள் பெருமானார் (ஸல்) அவர்கள் வெற்றி கரமாக தப்பிக்க உதவியது,

 ஹஜ்ஜிலும் அப்படித்தான்.

 ஹஜ் கமிட்டி மூலம் ஏற்பாடு செய்யப்படுகிற வழிகாட்டிகளின் உதவிகள் போதுமான அளவில் இருப்பதில்லை. தேவையான அளவில் வாலண்டியர்களை ஏற்பாடு செய்வதில்லை என்ற ஹாஜிகள் குறைபட்டுக் கொள்வது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று தான்.

 அதிலும் குறிப்பாக தமிழக ஹஜ் கமிட்டி என்பது ஒரு கண் துடைப்பு அமைப்பாகும். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை அந்த அமைப்பு தமிழக ஹாஜிகளுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை. சென்னையில் உள்ள ஹஜ் சர்வீஸ் சொசைட்டியின் உதவிப் பணிகள் இல்லை என்றால் தமிழத்திலிருந்து ஹஜ்ஜுக்கு செல்வோரின் நிலை இன்னும் சிரமமாகிவிடும் .

 உண்மையில் தமிழகத்திக் வசிக்கிற 7 இலட்சம் முஸ்லிம்களில் 6 ஆயிரம் பேர்தான் ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கு ஏற்படுகிற சிரமங்களை பற்றி யாருமே பேசுவதில்லை.

 ஹாஜிகளும் ஹஜ் முடிந்து ஊருக்கு திரும்பியதும் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள்.

இது ஹஜ் கமிட்டியில் ஊழலும் முறைகேடுகளும் மலிந்து வருவதற்கு காரணமாகி இருக்கிறது.

 அதனால் ஹஜ் கமிட்டியில் ஹஜ்ஜை பற்றி தெரிந்த – ஹஜ்ஜில் அனுபவமுள்ள – மார்க்கப் பற்றுள்ள ஆட்களை இடம் பெறச்  செய்யவும் தமிழக ஹஜ் கமிட்டியின் நடை முறைகள் தெளிவானதாகவும் உறுதியானதாகவும் அமையவும் குரல் கொடுக்க வேண்டியது தமிழ முஸ்லிம்கள் அனைவரின் கடமையாகும்.

 அது போல ஹஜ் வழிகாட்டிகளாக  அல்லது வாலணியர்களாக சென்றவர்கள் சரியாக பணியாற்ற தேவையான ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தங்களது முதிர்ந்த வயதில் ஹஜ் பயணம் மேற்கொள்வோரை விளையாட்டுப் பொருளாக ஹஜ் கமிட்டிகள் நடத்துவதை தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

இது கவனிக்கப்பட வேண்டிய முஸ்லிம்களின் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.

அல்லாஹ் மத்திய மாநில ஹஜ் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஹிதாய்த்தை தந்தருள்வானாக! 

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய நினைக்கிற மக்களுக்கு இன்னொரு ஆலோனை பொருத்தமானது.

இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஒரு குழுவினர் அனுபவ சாலி ஒருவரை துணைக்கு அழைத்து வந்த்தாக சொல்லப்படுகிறது.

ஒரு பகுதியில் உள்ளவர்கள் தனித்தனியாக ஹஜ்ஜுக்கு வின்னப்பிப்பதை விட 20 – 30 பேர்களாக விண்ணப்பித்தால் அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய அனுபவ சாலி ஒருவரை அவர்கள் உடன் வைத்துக் கொள்ள முடியும். ஒருவருக்கு ஹஜ்ஜின் வாய்ப்பை கொடுத்ததாகவும் இருக்கும்.  அனுபவ சாலி வழிகாட்டியின் துணை பெரிதும் உதவியாகவும் இருக்கும்.

நமக்கு கொஞ்சம் அதிகம் செலவு ஆனாலும் பதட்டமில்லாமலும், மன உளைச்சல் இல்லாமலும் ஹஜ்ஜு செய்ய அது ஓரளவு உபயோகப்படும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரம் குடித்து பலர் பலியாகியுள்ளனர். இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அல்லாஹ் தகுந்த ஆறுதலை தந்தருள்வானாக! நம்மையும் உலக மக்களையும் குடிப்பழக்கத்திலிருந்து பாதுகாப்பானாக!

அரசு மதுவிற்பனை செய்வது தான் நாட்டில் குடிகாரர்கள் அதிகரித்த்தற்கு காரணமாகும்,

அரசு நிர்ணயித்த விலையை விட வெளியே கம்மி காசுக்கு கிடைக்கிறது என்றதும் குடிப்பழக்கத்திற்கு மக்கள் அதை நோக்கி சென்றிருக்கிறார்கள்.

கள்ளச்சாரய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்வது சரியான தீர்வல்ல;

மது தடை சட்டத்தை உடனடியாக அமுல் படுத்துவதே சரியான தீர்வாகும்.

 அரசுக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் உண்மையான நிவாரணம் குறித்து சிந்திக்க வேண்டும்.

 அல்லாஹ் ஆட்சியாளர்களுக்கு நல்ல சிந்தனையை தந்தருள்வானாக!

 

(மக்கா முகர்ரமாவின் மஸ்பலாவிலிருந்து )

3 comments:

  1. Anonymous8:34 PM

    நான் வாரந்தோறும் வெள்ளி மேடை கட்டுரைகளை படிக்கிறேன், என் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.. இப்பணியைச் செய்யும் உங்களுக்கு அல்லாஹ் கிருபை தருவானாக,, அதே வேளையில்
    எனக்கு சரியாக அரபி ஓத தெரியாது! இதில் வரும் அரபியை என்னால் படிக்க இயலாது, தாங்கள் குர்ஆனின் வசன எண்களை பதிவிட்டால் எங்களைப் போன்றவர்கள் குரானில் தேடிப் படித்துக் கொள்வோம், பிறருக்கு எடுத்துச் சொல்வதற்கும் இலகுவாக இருக்கும்..

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் பதிவுக்கு நன்றி இறுதியில் கள்ள சாராயம் செய்தி தவிர்த்து இருக்கலாம்

    ReplyDelete
  3. சிறப்பான புதிவு.

    ReplyDelete