வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 25, 2024

வாசமில்லா மலர்களா நாம்?

 قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا}

ரமலான் மாதம் நாம் குர்ஆனை ஓதுவதற்கும் கேட்பதற்குமான மாதமாக இருந்தது.

இந்த ஷவ்வால் மாதம் திருக்குர் ஆனை ஓதக் கற்பிப்பதற்கு தொடங்கும் மாதமாகும்.

உலகம் முழுவதிலும் ரமலானிய ஓய்விற்கு பிறகு மதரஸாக்கள் ஆரம்பிக்கிற காலம் இது.

திருக்குர்ஆனை நாம் ஓதிக் கொள்வதற்கும் நமது பிள்ளைகளுக்கு ஓதக் கற்றுக் கொடுப்பதற்கும் நாம் முக்கிய கவனம் கொடுக்க வேண்டிய நேரம் இது.

நாம் குர்ஆனை ஓத தெரியாதவர்களாக இருந்து விடக் கூடாது.

வாசமில்லா மலர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு நபிமொழியில் இப்படி கூறினார்கள்.

 مثلُ المؤمنِ الَّذي يقرأُ القرآنَ كالأُتْرُجَّةِ طعمُها طيِّبٌ وريحُها طيِّبٌ والَّذي لا يقرأُ كالتَّمرةِ طعمُها طيِّبٌ ولا ريحَ لها

குர் ஆன் ஓத தெரிந்த முஸ்லிம் எலுமிச்சையை போல சுவையும் மணமும் உள்ளவர். ஓத தெரியாதவர் சுவை மட்டுமே இருக்கிற வாசமில்லாத பேரீத்தம் பழத்தை போன்றவர்..

இந்த உதாரணம் அரபு நாட்டு சூழலுக்கு ஏற்ப சொல்லப் பட்டுள்ளது. நம்முடைய நாட்டின் சூழலுக்கு ஏற்ப சொல்வதானால்

குர் ஆன் ஓத தெரியாத முஸ்லிம் வாசமில்லா மலரை போன்றவர்.

நம்மிடம் இவ்வளவு வசதி வாய்ப்புக்கள் இருந்தும் நாம் வாசமில்லா மலர்களாக இருக்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்.

கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும் மிக அற்புதமாக நம்மால் ஓதி விட முடியும்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு இஸ்லாமை தழுவிய சகோதரி பாத்திமா சபரிமாலா அழகாக குர் ஆன் ஓதுவதை இன்ஸ்டாகிராம் வீடியோவில் பார்க்கிறோம்.

இவ்வளவு தான் யார் முயற்சி செய்தாலும் அருமையாக மிக குறைந்த காலத்தில் குர் ஆனை கற்றுக் கொண்டு சிறப்பாக ஓத முடியும்.

திருக்குர்ஆன் நமக்கு ஓத தெரியும் என்றால் நமக்கு லோன்லீனஸ் என்ற தனிமையின் வெறுமையே இருக்காது.

அரபு நாடுகளில் வாகனங்களில் செல்லும் போது வாகன ஓட்டிகள் மிக சாதாரணமாக குர்ஆனை மனனமாக ஓதிக் கொண்டு செல்வதை நாம் பார்க்கலாம்.

இமாம் ஷாபி ரஹி அவர்கள் மினாவில் ஒரு முதியவரை சந்தித்தார்கள். அந்த முதியவர் ஷாபி அவர்களை விருந்துக்கு அழைத்தார். அதை உடனே ஏற்றுக் கொண்டார்கள். முதியவர் தன்னிடமிருந்த காய்ந்த ரொட்டியை இரண்டாக பிய்த்து ஒன்றை இமாம் ஷாபியிடம் கொடுத்த போது நீங்கள் குறைஷியரா என்று கேட்டார். ஆம் என்று பதிலளித்த இமாம் ஷாபி அதை எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் சொன்னார்.

குறைஷிகள் எவ்வளவு எளிதாக மற்றவர்களுக்கு விருந்தளிக்கிறார்களோ அதே எளிதில் மற்றவர்களின் விருந்தை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள்

இமாம் ஷாபி “ நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். மதீனாவிலிருந்து வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் அதை கேட்டதும் மகிழ்ச்சி பீறிட அப்படியானால் நீங்கள் இமாம் மாலிக்கை பார்த்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். பார்த்திருக்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் இமாம் மாலிக்கை பற்றி ஆர்வமாக மேலும் பல செய்திகளை கேட்டுக் கொண்டார்.

அப்போது அந்த முதியவர் நாங்கள் 14 பேர் இங்கு பயணம் வந்தோம். எங்களில் ஒருவர் வரும் வழியில் இறந்து விட்டார். அவருடைய ஒட்டகம் காலியாக இருக்கிறது.   நீங்கள் விரும்பினால் எங்களுடன் வரலாம் என்று அழைத்தார். இமாம் ஷாபி ரஹ் அவர்கள் தனது தாயாரிடம் சம்மதம் பெற்று இமாம் மாலிக்கிடம் கல்வி கற்க மதினாவிற்கு  சென்றார்கள்.

அந்த பயணம் 14 நாட்கள் பிடித்தது. அந்த 14 நாட்களிலும் இமாம் ஷாபி 14 முறை குர் ஆன் ஓதினார்கள்.

பயணங்களில் குர் ஆனும் ஓதும் வழக்கம் மிக சாதாரணமாக நமது முன்னோர்களிடம் இருந்த்து. அது அவர்களுடைய நீண்ட பயணங்களின் வெருட்சியை மாற்றி சுகமானதாக ஆக்கியது.

வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்ட அபுல் காஸிம் பஜ்லுல் ஹக் அவர்களுடைய வாழ்வில் அவருக்கு அது பெரும் பாதுகாப்பை தந்தது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய அரசியலில் குறிப்பாக இன்றைய வங்க தேச பிராந்தியத்தின் அரசியலில் மிகப் பெரும் ஆதிக்கம் செலுத்தியவர் பஜ்லுல் ஹக். வங்க இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் செயலாளராக இருந்தார்.

அவர் ஒரு முறை ரயிலில் பயணம் புறப்பட்டார். ஏராளமானோர் அவரை வழியனுப்ப வந்திருந்தனர்.  அந்த ரயிலில் குண்டு வெடித்தது. பஜ்லுல் ஹக் கொல்லப்பட்டதாக அனைவரும் பதறினர். இந்த பீதிக்கு நடுவே அன்று மாலை நகரின் பிரதான மைதானத்தில் பஜ்லுல் ஹக் பேசுவார் என்ற செய்தி பரவியது. ஏராளமான மக்கள் கூடினர். பஜ்லுல் ஹக் அக்கூட்டத்தில் தோன்றினார்.   பஜ்லுல் ஹக் கூறினார். என்னைக் கொல்ல யாரோ சதி செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த குர் ஆன் என்னைக் காப்பாற்றியது. வழக்கமாக நான் பயணங்களில் ஓதுவதற்காக ஒரு சிறு குர் ஆனை கையில் வைத்திருப்பேன். அன்று பயணம் புறப்பட்ட பிறகு தான் அந்த குர்ஆனை எடுத்து வரவில்லை என்பது தெரிந்தது. அதனால் நான் அடுத்த ஸ்டேஷ்னிலேயே இறங்கி விட்டேன். அதனால் இந்த பெரிய விபத்திலிருந்து நான் காப்பாற்றப் பட்டேன் . இந்த குர் ஆன் என்னைக் காப்பாற்றியது என்று கூறினார்.

உலகத்தில் வாழும் மக்கள் இந்துக்கள் பெளத்தர்கள், யூதர்கள் கிருத்துவர்கள் என பலரிடமும் வேதங்கள் இருக்கின்றன.

அந்த வேதங்கள் குர் ஆன் அளவுக்கு ஓதப்படுகின்றனவா என்பதை மட்டும் சிந்தித்துப் பார்த்தால் போதுமானது.

குர் ஆன் எந்த அளவு சிறப்பானது என்பது புரிய வரும்.

இதற்கு மேல் குர் ஆனிலிருந்து கிடைக்கிற மற்ற நன்மைகள் ஏராளமாக இருக்கின்றன.

குர்ஆனை ஓதுவது, ஓதிக் கொடுப்பது. அதன் பொருளை படிப்பது படித்துக் கொடுப்பது அதில் சிந்திப்பது, ஆய்வுகள் செய்வது, ஏன் திருக்குர் ஆனை பார்த்துக் கொண்டிருப்பது கூட ஒரு வணக்கமாகும்.

ஒரு முஸ்லிமாக அல்லாஹ் நமக்கு செய்த பேருபகாரம் திருக்குர் ஆனை வழங்கியது.

இந்த ஒரு அருள் நமக்கு போதும். உலகின் வேறு எந்த நூலும் நமக்கு தேவையில்லை என்று முந்தைய முஸ்லிம் சமுதாயம் நம்பியது.

மற்ற செய்திகளை அறிந்து கொள்ளக் கூடாது என்பதல்ல இதன் நோக்கம். நம்மிடமிருக்கிற பொக்கிஷத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

முஸ்லிம்கள் பாரசீகத்தை வென்ற போது, அப்ப்டையின் தளபதி உமர் ரலி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

كُتب إلى عمر -رضي الله عنه- عند فتح بلاد فارس : "إنا قد وجدنا من كتب القوم حمل وقرين أو ما أشبه ذلك، وفيها من الحكمة وفيها من العبر، فما رأيك فيه؟

இந்த மக்களிடம் சில புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் அறிவு ஞானக்கருத்துக்கள் பல இருக்கின்றன. அவற்றை என்ன செய்வது என்று அந்த தளபதி கேட்டிருந்தார்.

 உமர் ரலி பதில் எழுதினார்கள்

فكتب -رضي الله عنه-: أن أحرقها جميعًا، فإن الله -تبارك وتعالى- قد أغنانا بالقرآن" لا نحتاج إلى حكمة، ولا نحتاج إلى منطق، ولا نحتاج إلى فلسفة، ولا إلى دراسات اجتماعية، ولا إلى دراسات نفسية، ولا إلى ما يقال وما يسطر، لا نحتاج إلا إلى أن نؤمن بكتاب ربنا تبارك وتعالى

அவை அனைத்தையும் எரித்து விடுங்கள், அல்லாஹ்வின் வேதம் நம்மிடம் இருக்க வேறு எந்த வாக்கும் விளக்கமும் நமக்கு தேவையில்லை என்றார்கள்

 இவ்வாறு அவர்கள் சொல்லக் காரணம் அவர்கள் சொந்தக் சிந்தனை அல்ல;

 பெருமானார் (ஸல்) அவர்களிடமிருந்து ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் பெற்ற பாடமாகும்.

 لما أن رآه وفي يده صحيفة من التوراة، قال: «يا عمر، والله لو كان موسى حيًا ما وسعه إلا اتباعي

ஒரு முறை தவராத்தின் சில ஏடுகளை வைத்து உமர் ரலி அவர்கள் படித்த்துக் கொண்டிருப்பதை பார்த்த பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூஸா இப்போது உயிருடன் இருந்தால் என்னைப் பின் தொடர்ந்து எனக்கருளப்பட்ட வேத்த்தை படிப்பார் என்று  கூறினார்கள்.

 இது திருக்குர்ஆனில் முஸ்லிம் சமுதாயம் எத்தகைய அக்கறையை செலுத்த வேண்டும் என்பதற்கான எடுத்துக் காட்டாக அமைந்த்து.

 நாம் இந்த உலகில் மற்ற கல்விகள் எதை வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் இஸ்லமை பொருத்தவரை எல்லாவற்றையும் விட நாம் படித்தே ஆக வேண்டிய கல்வி திருக்குர் ஆன் ஆகும்.

 இதை முஸ்லிம்களான நாம் மறந்து விடக் கூடாது.

 இன்று முஸ்லிம்கள் என்ற பெயரில் அதிகாரத்தையும் சலுகைகளையும் மரியாதையையும் கேட்பதில் நாம் முன்னணியில் நிற்கிறோம்.

 சமூக ஊடகங்களை திறந்தால். சமுதாயத்திற்காக என்ற குரல்கள் கணக்கின்றி ஒலிக்கின்றன.

 ஆனால் ஒன்றை உறுதியாக நினைவூட்டுகிறோம். சகோதரர்களே!

 நமது மார்க்கம் சில அடிப்படைகளை முஸ்லிம்களின் இயல்பாக சொல்லிக் காட்டுகிறது.

ஒன்று தொழுகை, மற்றது குர் ஆன் ஓதுவது,

 இந்த இரண்டும் இல்லாத ஒருவர் இல்லாத ஒருவர் தன்னை சமூகம் சார்ந்தவராக சித்தரிப்பது உண்மையில் ஒரு வேடிக்கையானதாகும்.

 நம்முடைய தமிழ் நாட்டில் ஏகத்துவம் என்ற பெயரில் பல போலியான அமைப்புக்கள் வந்தன. அவற்றில் பலர் மிக தீவிரமான ஈடுபாடு கொண்டுள்ளதாக கருதிக் கொள்கின்றனர். உண்மையில் அவர்களுடைய ஈடுபாடு என்பது வெத்து வாதங்களைச் செய்வதில் மட்டுமே வெளிப்படுகிறது,

 ஹதீஸ் சஹீஹா ? எந்த கிதாபு ? எந்த எண் என்று கேட்கிற பலரும் கச்சையை கட்டிக் கொண்டு சமூக ஊடகங்களில் கேள்வி கேட்க வந்து விடுகிறார்கள்.

 மதுரையை சேர்ந்த நம்முடைய சகோதர்ர் நவ்ஸாத் அலி பாக்கவி அவ்வாறு கேட்போரிடம் “ முதலில் உனக்கு குர் ஆன் ஓத தெரியுமா என்று ஒரு கேள்வி கேட்கிறார். எவனும் பதில் சொல்வதில்லை.

 அப்படியானால் மார்க்கம் இவர்களிடம் ஒரு ஈகோவாகவும் விவாதப் பொருளாகவும் இருக்கிறதே தவிர உண்மையில் இல்லை.

 எங்களது அன்பு இளவல்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு மார்க்கத்தின் மீது கொஞ்சம் மதிப்பு இருக்கிறது என்றால். இந்த சமூகத்தை பற்றி நீங்கள் கொஞ்சமேனும் அக்கறை செலுத்துகிறீர்கள் என்றால்.

 நீங்கள் செய்ய வேண்டிய முதன்மையான நல்ல காரியம் குர் ஆனை ஓதுவதும் தொழுவதும் ஆகும்.

 அடிப்படையில் இதை நிறைவு செய்து விட்டு நீங்கள் மற்ற விசயங்களை பற்றி சிந்தியுங்கள். அதுவே அர்த்தமுள்ளதாகும்.

 இந்திய அணுவிஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுடைய்யை நினைவகம் இராமேஸ்வரம் பேக்கரும்பில் இருக்கிறது. அங்கு சென்று பாருங்கள். அவர் தன்னுடைய கடைசி பயணமான சிம்லாவிற்கு அவர் எடுத்துச் சென்ற பொருள்களை வைத்திருக்கிறார்கள். அதில் அவர் ஓதுகிற குர்ஆனும் தொழுகிற முஸல்லாவும் இருக்கிறது.

 இன்று அப்துல் கலாமை கூட ஒரு சரியான முஸ்லிமா என்று விமர்சிப்பவர்கள் உண்டு ?

 உங்களுடன் உங்களது பயணத்தில் குர் ஆனும் முஸல்லாவும் இருந்ததா என்று யோசித்து விட்டு பிறகு பேசுங்கள் !

 அருமையானவர்களே குர் ஆனை ஓத தெரிவது நமது இஸ்லாமிய வாழ்விற்கு மிக அடிப்படையான அளவுகோல்

 இது நமக்கு மனிதர்களான நமக்கு மட்டுமே கிடைத்த பெருமை

 குர் ஆன்  சப்தமாக ஓதப்படுகிற இடத்தில் மலக்குகள் சூழ்ந்து கொள்கிறார்கள் என்ற கருத்தில் பல  ஹதீஸ்கள்  உண்டு.

  ما اجتَمَعَ قَومٌ في بَيتٍ مِن بُيوتِ اللهِ تَعالى، يَتلُونَ كِتابَ اللهِ، ويَتَدارَسونَه بَينَهم؛ إلَّا نَزَلتْ عليهمُ السَّكينةُ، وغَشيَتْهمُ الرَّحمةُ، وحَفَّتْهمُ المَلائِكةُ، وذَكَرَهمُ اللهُ فيمَن عِندَه.

 மலக்குகள் ஏன் சூழ்ந்து கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள்.

 இந்த வேதத்தை ஓதும் பாக்கியம் மனிதர்களான நமக்கு மட்டுமே உண்டு. மலக்குகளுக்கு கூட கிடையாது. மலக்குகளில் ஜிப்ரயீல் அலை அவர்கள் மட்டுமே திருக்குர் ஆனை ஓதத் தெரிந்தவர்.

மற்ற மலக்குகளால திருக்குர் ஆனை கேட்க மட்டுமே முடியும். அதனாலேயே திருக்குர் ஆனை யாரேனும் சப்தமாக ஓதினால் அதை கேட்பதற்கு அவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.

முதலில் ஒருவர் வருகிறார். அடுத்தடுத்து பலர் வந்து சேர்ந்து கொள்கிறார்கள். அங்கு மலக்குகளின் ஒரு பெரும் கூட்டம் சூழ்ந்து விடுகிறது என்பது இதன் கருத்து என்று அவர்கள் விளக்கம் தருகிறார்கள் .

திருக்குர் ஆனை அழகு பட ஓதுபவரின் உதட்டில் மலக்குகள் முத்தமிடுகிறார்கள்

திருக்குர் ஆனை மிக அழகு பட ஓதியவர்களில் ஒருவர் ஆஸிம் (ரஹ்) ரிவாயத்து ஹப்ஸின் அன் ஆஸிமின் என்று இந்த ஓதலைப் பற்றிய ஒரு பாரம்பரியம் இருக்கிறது.

அந்த ஆஸிம் ஓதும் போது வாய் மணக்கும்.

ஒருவர் அவரை சந்தித்து நீங்கள் ஏலக்காய் சாப்பிட்டு விட்டு ஓதுகிறீர்களா என்று கேட்டார். அவர் பதிலளிக்கவில்லை. நீண்ட வற்புறுத்தலுக்கு பிறகு அவர் பதிலளித்தார். ஒருமுறை நான் கனவில் ஓதிக் கொண்டிருந்தேன். என் முன் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள் எனது உதட்டில் முத்தமிட்டார்கள். அன்றிலிருந்து இந்த நறுமனம் வருகிறது என்றார்.

ஆஸிம் ரஹி அவர்களது வாயிலிருந்து நறுமணம் வந்த்தை மக்கள் அறிந்து கொண்டது அவருக்கு மட்டுமானதாக இருக்கலாம்.

ஆனால்  நாம் திருக்குர் ஆனை ஓதுகிற போது நமது வாய் அதிலிருக்கும் மணத்தை நுகர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான மலக்குகள் இருக்கிறார்கள்.  

நாம் வாசமுள்ள மலகர்களாக தயாராவோம். நமது  பிள்ளைகளை வாசமுள்ள மலர்களாக்கவும் அக்கறை செலுத்துவோம்

அல்லாஹ் தவ்பீக செய்வானா!

 

மக்தப் முந்தைய பதிவுகள் 2024

திலாவத் அரும் பாரம்பரியம்

 திண்ணையில் வளர்ந்த தீன் கல்வி 

மதரஸா ! இஸ்லாமிய வாழ்வின் தலை வாசல்

Thursday, April 18, 2024

நாடு நலம் பெறட்டும்

 

قُلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 3:26

நமது நாட்டை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்யும் அதிகாரம் படைத்த கட்சியை தேர்வு செய்வதற்காக. நாம் இன்று வாக்களித்திருக்கிறோம்.

இன்னும் சிலர் வாக்களிக்க உள்ளனர். அனைவரும் தவறாது வக்களித்து விட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

நாம் நமது வாக்குரிமையை செலுத்தி நம்மை ஆள்வோரை தேர்வு செய்வது போல ஒரு தோற்றம் தெரிந்தாலும் உண்மையில் அல்லாஹ்வின் விருப்ப படியே ஆட்சியாளர் தேர்வாகிறார்.

இஸ்லாமிய சிந்தனையாளர்களின் ஒரு கருத்தை நினைவூட்டுகிறேன்.  

தேர்தல் என்பது ஒரு அடையாளப் பூர்வ நடவடிக்கை தான். ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு வழிமுறை கடைபிடித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் ஒரு வெளிப்படையான காரணம் அவ்வளவே.

பிர்அவ்னிடமிருந்து  தப்பிக்க மூஸா அலை அவர்கள் செங்கடலை தடியால் அடித்தது போல.

தடியால் அடித்ததால் கடல் பிளந்து விட வில்லை. அல்லாஹ் மூஸாவுக்கு கட்டுப்படுமாறு கடலுக்கு உத்தரவிட்டிருந்தான். அதற்கு அடையாளமாக அவர் உன்னை அடிக்கும் போது அவருக்கு கட்டுப்படு என்று கூறியிருந்தான். அவர் அடித்த போது அவரது விருப்பத்திற்கு ஏற்ப கடல் 12 பாதைகளாக பிளந்தது.

ரூஹுல் ம ஆனியில் ஆலூஸி ரஹ் கூறுகிறார்.

 وكان الله تعالى قد أوحى إلى البحر أن أطع موسى ، وآية ذلك إذا ضربك بعصاه، فأوحى الله تعالى إلى موسى (أن اضرب بعصاك البحر).

وإنما أمر - عليه السلام - بالضرب فضرب، وترتب الانفلاق عليه إعظاما لموسى - عليه السلام - بجعل هذه الآية العظيمة مترتبة على فعله، ولو شاء - عز وجل - لفلقه بدون ضربه بالعصا

மூசா அலை அவர்களை கவுரவப்படுத்துவதற்காகவே கடலில் அவரை அடிக்குமாறு அல்லாஹ் கூறினான். அல்லாஹ் ஏற்கெனவே கடலுக்கு மூஸா அலை அவர்களுக்கு வழி விடுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தான். அவர் கடலை அடிப்பது கடல் பிளப்பதற்கு ஒரு அடையாள சமிஞை யாக்கினான்.

இதில் உண்மையில் முடிவுகளை தீர்மாணித்தவன் அல்லாஹ்வே ஆகும். அது போலவே தேர்தலில் நாம் வாக்களித்திருந்தாலும் ஆட்சியாளர் யார் என்பது அல்லாஹ்வின் தீர்மாணத்திலேயே அமையும்

அல்லாஹ் தான் மாலிகுல் முல்க் அவன் விரும்புகிறவர்களுக்குத் தான் அரசு.

 இந்த அடிப்படையில் திருக்குர்ஆன்  சில பழைய  வரலாறுகளையும்  சுட்டிக்  காட்டுகிறது.

 ·                     கன்ஆன் தேசத்தில் பிறந்து சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்ட  சிறுவர் யூசுப் (அலை) எங்கோ இருக்கிற எகிப்தின் அரியனையை  அலங்கரித்தார்கள்.

·                     وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ ۚ نُصِيبُ بِرَحْمَتِنَامَن نَّشَاءُ ۖ وَلَا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ (56)

                     ஜாலூதின் (கோலியத்) படையில் சாதரண கவன் அடிக்கும் வீர்ரான தாவூத் (அலை) டேவிட் இஸ்ரவேலர்களின் அரசரானார். 

فَهَزَمُوهُم بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُودُ جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُۗ

 இதே சத்தியக் கோட்பாட்டை அல்லாஹ் பெருமானாரின் வாழ்க்கையில் நிறைவேற்றினான்.

                    மக்காவிலிருந்து பதுங்கிப் பதுங்கி வெளியேறிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எட்டுவருடத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அரசரானார்கள். அரசியல், அதிகாரம் என்ற எந்த ஒரு வார்த்தையையும்  பிரயோகம்  செய்யாமலே மாபெரும் அரசியலமைப்பை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஸ்தாபித்தார்கள். அல்லாஹ்வின் விருப்பம் ஒன்றை மட்டுமே அதற்கு காரணமாக சொல்ல முடியும்.

·                      ஓட்டகை மேய்க்க கூட தகுதியற்றவர் என்று தந்தை கத்தாபால் ஏசப்பட்ட உமர் (ரலி) இருபத்திரண்டரை இலட்சம் சதுர மைல்களை கட்டியாண்டார்கள்.

·                     வியாபாரியான உஸ்மான் (ரலி) அவர்களும் சாமாணிய கூலித் தொழிலாளியான அலி ரலி அவர்களும் அதிபர்கள் ஆனார்கள்.அலி ரலி அவர்கள் தன் வாழ்நாளில் ஜகாத் கொடுக்கும் அளவுக்கு பண வசதி படைத்தவராக இருந்ததில்லை என்று வரலாறு கூறுகிறது.


இஸ்லாமிய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த ஆட்சித்தலைவர் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்).

அவர் ஒரு ஜும்  தொழுகைக்காக புகழ்வாய்ந்த டமாஸ்கஸ் நகரத்தின் உமய்யா ஜாமிஆ பள்ளிவாசலில் உட்கார்ந்திருந்த போது அடுத்த ஆட்சியாளர் யார் என்பது பற்றி மன்னர் சுலைமான் பின் அப்தில் மலிக்கின்  வசிய்யத் படிக்கப் பட்டது. ஆட்சிக்குரியராக சுலைமானுடைய மகன் வலீத் கருதப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக  சுலைமானின் மச்சான் உமர் பின் அப்துல் அஜீசின் பெயர் அறிவிக்கப் பட்டது.

அதிர்ச்சியில் உமர் பின் அப்துல் அஜீஸ் இன்னாலில்லாஹி  இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொன்னார்.  

دابتي كفايتي وفسطاطي  أوسع لي

எனது கூடாரமே எனக்குப் போதுமானது. எனது வாகனமே எனக்கு அதிகம்  என்றார்.

சுலைமான் பின் அப்துல் மலிக் நோயுற்று இருந்த காரணத்தினால் அவருடைய தீர்மாணத்தை அதிகம் மறுக்க முடியாத உமர் பின் அப்துல் அஜீஸ். ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு மக்களிடம் எனது விருப்பமில்லாமலும் ஆலோசனை கலக்காமலும் என்னை அமீர் என்று அறிவித்து விட்டார்கள் எனவே மக்களை நீங்கள் விரும்பினால் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவித்தார்.

மக்கள் பெரும் சப்தமெழுப்பி நீங்களே அரசராக இருக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினர், இப்படித்தான் இஸ்லாமின் ஐந்தாம் கலீபா உமர் ஆட்சியதிகாரத்தைப் பெற்றார்.

بويع بالخلافة بعد وفاة سليمان بن عبد الملك وهو لها كاره فأمر فنودي في الناس بالصلاة، فاجتمع الناس بالمسجد الأموي بدمشق، فلما اكتملت جموعهم، قام فيهم خطيبًا، فحمد الله ثم أثنى عليه وصلى على نبيه ثم قال: "أيها الناس إني قد ابتليت بهذا الأمر على غير رأي مني فيه ولا طلب له... ولا مشورة من المسلمين، وإني خلعت ما في أعناقكم من بيعتي، فاختاروا لأنفسكم خليفة ترضونه". فصاح الناس صيحة واحدةقد اخترناك يا أمير المؤمنين ورضينا بك، فَوَّلِ أمرنا باليمن والبركة.

 பண்டை அரசர்களது காலத்தில் மட்டுமல்ல்; நவீன பாணி அரசியல் போக்கிலும் கூட யார் அதிகாரத்தை பெறுகிறார்கள் என்பது மனித கற்ப்னைக்கு அப்பாற்பட்டவையாகும்.

 ·         யார் என்றே உலகிற்கு தெரியாத ஹமீத் கர்சாய் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் அதிபராக 14 ஆண்டுகளாக (22December 2001) பதவி வகித்தார். அவரை தொடர்ந்து அஷ்ரப் கனி என்பவர் 7 வருடங்கள் அதிபராக இருந்தார்.

       ஏன் இந்தியாவின் பிரதமராக கடந்த 10 ஆண்டுகள் பதவி வகித்த மன்மோகன் சிங் அரசியல் அரங்கிற்கு தொடர்பே இல்லாதவராவார். ஆச்சரியம் என்னவென்றால் ஒரு முறை கூட அவர் மக்களை நேரடியாக தேர்தல் களத்தில் சந்தித்து வெற்றி பெற்றதில்லை.  1999 ல் நடைபெற்ற தேர்தலில் தெற்கு தில்லியில் போட்டியிட்ட அவர் தோற்றுப் போனார்.நிதியமைச்சராக ஆவதற்கு முன்பு வரை மாருதி 800 காரைத் தவிர (noting that he drives a Maruti 800)வேறு காரை அவர் ஓட்டியதில்லை.

·        நெல்சன் மண்டேலா .27 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் தென்னாப்பிரிக்காவின் புகழ் பெற்ற அதிபரானார்.

·         அதே போல 1996  லிருந்து 2004 வரை  சிறையிலிருந்த  ஆசிப் அலி ஜர்தாரி ( பேநசீர் புட்டோவின் கணவர்) 2008 ல் பாகிஸ்தானின் அதிபரானார் ,

  ஆட்சியதிகாரம் யாருக்கு எப்படி வழங்கப்படுகிறது என்பதில் மக்களின் கணிப்புக்கள் காலாவதியாகிவிடுவதற்கான உதாரணங்கள் இவை.

 அதே போல்  அதிகாரம் பறிக்கப்படுவதும் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது.

 இரண்டாம் உலக யுத்தத்தின் போது இங்கிலாந்துக்கு மகத்தான் வெற்றியை தேடித் தந்தவர் வின்ஸன் சர்ச்சில்.  உலக யுத்ததை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் அவர் தோற்றுப் போனார். உலகத் தலைவர்களை ஆச்சரியப் படவைத்த திருப்பம் அது.

 அதே போல எகிப்தில் பெருவாரியான் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு அங்கு தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை.

 எனவே காரண காரியங்களால் நாம் சில தீர்வுகளை செய்திருந்தாலும் அதற்கு இறுதி வடிவம் கொடுப்பவன் அல்லாஹ்வே.

ஆகவே நபி மூசா அலை அவர்கள் கடலை தடியால் அடித்த பிறகு கேட்ட துஆ வை நாம் வாக்கை செலுத்திய பிறகு அல்லாஹ்விடம் கேட்போம்.

 وروي أنه - عليه السلام - قال: اللهم لك الحمد، وإليك المشتكى، وإليك المستغاث، وأنت المستعان، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.

 யா அல்லா இன்றை பிர் அவ்ன்களிடமிருந்து எங்களையும் எங்களது நாட்டையும் காப்பாற்று. அரசியல் கடலில் நாங்கள் துடுப்புகள் கிட்டாமல் அலைகளில் தடுமாறுவதில் இருந்து எங்களை பாதுகாத்து விடு. தெளிவான தீர்க்கமான நல்ல அரசுக்கு வழி வகை செய்வாயாக!  என்று அல்லாஹ்விடம் கையேந்துவோம்.

நாடு நலம் பெறட்டும். ஆமீன்.