வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 10, 2026

ஏன் இவ்வளவு டென்ஷன்?

இன்று உலகமெங்கும் சண்டை மயமாகி வருகிறது.

 ஈரான் அமெரிக்கா யுத்தம் பலத்த சேதங்களை உலக மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. அது எப்போதும் முடியும் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் நடந்து கொண்டே இருக்கிறது.

 இதற்கிடையில் எமன் நாட்டின் ஹூத்தி அமைப்பினருக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே சண்டை மூண்டிருக்கிறது. பலர் பலியாகி இருக்கிறார்கள் . இது எங்கு போய் நிற்கும் என்று சொல்ல முடியாத அளவு முஸ்லிம் உலகு இரண்டு பட்டிருக்கிறது.

 இது வல்லாமல் உலகம் முழுவதிலும் அரசியல் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஒரே சண்டை மயமாக இருக்கிறது.

 இது தவிர இயற்கையின் பேரிடர்களும் மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி வருகின்றன.

 நேபாளத்தின் பெரு வெள்ளச் சேத்த்தில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை கூட முழுவதுமாக வெளிவருவதற்கு முன் இந்தோனேஷியாவில் பெரும் எரிமலை வெடிப்ப் ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு இந்தோனேஷியாவில் இயற்கையானது தேனே என்று நினைக்கலாம். ஆனால் இந்த முறை இந்தோனேஷியாவில் தோன்றும் புகையின் தாக்கத்தால் மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் விமான நிலையங்களை மூடவும் பொது விடுமுறை வழங்கவும் வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 உலகம் கலவர மயமாகி வருகிற சூழலில் நம்மில் ஒவ்வொருவரும் அவர்வரது வாழ்க்கையை கூடுமானவரை அமைதியானதாக ஆக்கிக் கொள்வதற்கும் இருக்கிற அமைதியை பாதுகாத்துக் கொள்ளவும் அக்கறை செலுத்த வேண்டும். ஆசைப்பட வேண்டும். துஆ கேட்க வேண்டும்.

 வாழ்க்கையின் அமைதியை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளில் பிரதான மான ஒன்று சகிப்புத்தன்மை ஆகும்.

 சகிப்புத்தன்மை என்றால் என்ன?

 சகிப்ப்த்தன்மைக்கு இரண்டு தெளிவான அம்சங்கள் உண்டு

ஒன்று பழிவாங்கும் சிந்தனையை கைவிடுவது. இரண்டு, மற்றவர்களின் உணர்வை ஏற்றுக் கொள்வது.

 நமக்குள்ளே பதிலுக்கு பதில் என்ற உணர்வு இயல்பாக இருக்கும்.

அவன் பேசிவிட்டால் நாமும் பேசவேண்டும் ,அவன் அடித்து விட்டால் நாமும் அடிக்க வேண்டும்அவன் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டால் நாமும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் பழி வாங்கும் தன்மை.

 இந்த பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அது சகிப்புத்தன்மை.

 மனைவியோமுதலாளியோமாமியாரோ பிள்ளைகளோ நண்பர்களோ 

பார்ட்னர்களோ அலட்சியப்படுத்தி விடுவார்கள் எனில் பதிலுக்கு ஒரு நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்று நினைக்காமல் இருந்தால் அது சகிப்புத்தன்மை.

  அதே போல மற்றவர்கள் எல்லா விதத்திலும் நமது விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் அவர்களுக்குரிய முறையில் அவர்கள் இருப்பார்கள் என்று ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மை.

 இந்த இரண்டு அளவுகோள்களிலும்   இன்றைய நமது  வாழ்வியலில் சகிப்ப்புத் தன்மை வெகுவாக குறைந்து வருகிறது. மத சகிப்புத்தனமை மொழி இன சகிப்புத்  தன்மை வெகுவாக குறைந்து வருகிறது. 

 எங்கும் டென்ஷன் எதனால் ?

 நமது வாழ்வில் டென்சனை குறைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் பிறரை சகித்துக் கொள்ள முதலில் பழக வேண்டும்.

 நமது பணியாளர் நாம் விரும்பிய படி செயல் படாத போது

நமது  பிள்ளைகளோ மற்றவர்களோ நமக்கு கட்டுப்படாத போது , நாம் சகிப்புத்தன்மையை தவற விடுவோம் எனில் டென்சன் தானாக உயரும்.

 டென்சனுக்கும் மருந்து சகிப்புத்தன்மையே!

 இந்த உலகில் மகத்தான சாதனைகளை படைத்த பெருமானார் (ஸல்அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்த முக்கிய இய்ல்பு

அழகானதை கொண்டு கெட்டதை தடுங்கள் என்பதாகும்.

ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ

 நம்மில் ஒவ்வொருவருக்கும் அற்புதமான வழிகாட்டல் இது.

நம் முன் ஒரு பிரச்சனை வருகிற போது நாம் ஆத்திரப்படவும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்கவும் இரண்டு வாய்ப்புக்கள் இருக்கின்றன.

 சகிப்புத்தன்மை அழகிய வழிமுறையாகும்.

 இந்த வழி முறையை ன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்    பெருமானார் (ஸல்) கடைபிடித்தார்கள்.

 காழி இயாழ் தன்னுடைய ஷிபா என்ற நூலில் கூறுகிறார்.

 وهو صل الله عليه وسلم لا يزيد من كثرة الأذي إلا صبرا

துன்புறுத்தல்கள் பெருமானாரின் பொறுமையையே அதிகரித்தன.

சகிப்புத்தன்மையின் ஏராளமான வெளிப்பாடுகளை பெருமானார் (ஸல்) அவர்களிடம் பார்க்கலாம்.

 மென்மையான வார்த்தைகள்

 பெருமானாரின் வாழ்வில் மனைவியரிடம் பணியாளர்களிடம் நண்பர்களிடம் எதிரிகளிடம் என அனைவரிடத்திலும் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினார்கள்/

 ஆயிஷா ரலி கூறுகிறார்;

 நான் எப்போதாவது கோபப்பட்டு பெருமானாரிடம் பேசினால் பெருமானார் “ ஆயிஷ்சிவந்த சிறுமியேஎன அழைப்பார்கள்.

 அந்த ஒரு வார்த்தை கோபத்தை தணித்துவிடும்.

 பண்பாடு குறையாமல் நடந்து கொள்வது.

 உஹது யுத்தம் கடும் இன்னலுக்கு தாமும் தம் சகோதரர்களும் ஆளாக்கப்பட்ட நிலையில் .. பெருமானாருக்கு ஏற்பட்ட காயங்களை கண்டு பொறுக்க முடியாத தோழர்கள் சிலர் காபிர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்ய கூறிய போது நபி (ஸல்சொன்னார்கள்.

 وعن أبي هريرة ، قال : قيل يا رسول الله ادع على المشركين قال : إني لم أبعث لعانا ، وإنما بعثت رحمة رواه مسلم .

 பிறகு சொன்னார்கள்

 أنه (صلى الله عليه وآله وسلم) قاله يوم أحد عندما شج في وجهه وقيل له: ألا تدعو عليهم؟ قال:

(اللهمَّ أهد قومي فإنهم لا يعلمون)

 என்னே வியப்பூட்டுகிற சகிப்புத்தன்மை ?

 அது பெருமானாருக்கு எத்தகைய பெருமையாக அமைந்த்து ? எத்தகைய மாபெரும் வெற்றிகளை கொடுத்த்து என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

 உதவிகளை தடுக்காமை

 மக்காவாசிகளுக்கு எமனிலிருந்து கோதுமை விநியோகம் செய்து வந்த சுமாமா பின் அஸால் ثمامة بن اثال

இஸ்லாமை தழுவினார்இனி மக்காவின் மக்களுக்கு கோதுமை சப்ளை செய்ய மாட்டேன் என சபதமேற்றார்மக்காவாசிகள் பெருமானாரின் சிபாரிசுக்கு வந்தார்கள்பெருமானார் பகையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வில்லைவேறு நிபந்தனை எதையும் போட வில்லை.

 பெருமானார்  (ஸல்அவர்கள் சுமாமாவுக்கு கடிதம் எழுதினார்கள்.

வழமை போல மக்காவாசிகளுக்கு கோதுமை அனுப்பவும்அவர்களை பசியில் தள்ளிவிட வேண்டாம்என்று எழதினார்கள்,

 கொடூரங்களையும் மன்னித்தல்

 பெருமானாரின் மகள் ஜைனப் அம்மையார் மக்காவிலிருந்து தப்பி மதீனாவிற்கு செல்லும் போது அவர்களை நோக்கி ஈட்டி எறிவது போல பாசாங்கு செய்தார் ஹிபார் பின் அஸ்வர் . கர்ப்பிணியாக இருந்த ஜைனப் அம்மையார் பயந்து போய் சரிந்தார்கள்ஒட்டகையின் மேலிருந்து பாறையின் மீது விழுந்தார்கள்கர்ப்பம் கலைந்து போனதுஇதே சிரமத்தோடு 15 நாட்கள் பயணம் செய்து சைனப் அம்மையார் மதீனா வந்து சேர்ந்தார்கள்அவரிருந்த கோலத்தைப் பார்த்து பெருமானார் (ஸல் கண்ணீர் விட்டழுதார்கள்எனது இந்த மகள் பட்ட சிரமத்தைப் போல தீனுக்காக யாரும் சிரமப்பட்டதில்லை என்றார்கள்.

 அப்போது ஏற்பட்ட அந்த பலகீனமே ஜைனப் அம்மையாரின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது.

 இதே ஹிபார் மக்கா வெற்றிக்கு பிறகு பல ஊர்களையும் சுற்றி விட்டு பெருமானாரிடம் வந்த போது பெருமானார் அவரை ஏற்றுக் கொண்டார்கள்.

 இன்று சின்ன சின்ன குற்றங்களுக்காக அடுத்தவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நினைக்கிறோமே 

 நாம்பெருமானார் ஹிபாரை ஏற்றுக் கொண்டதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

 எதிரியின் மகனை ஏற்று கொண்ட பெருமானார்.

 அபூ ஜஹ்லுடைய மகன் இகிர்மா வுக்கு மன்னிப்பு கிடையாது என மக்கா வெற்றியின் போது பெருமானார் அறிவித்தார்கள்அவரது மனைவி உம்முஹகீம் வந்து கணவருக்காக பரிந்து பேசினார்பெருமானார் இகிரிமாவை ஏற்றுக் கொண்டார்கள்.

 சட்டமாக சொன்ன உத்தரவுக்குப் பின்னரும் அதையே காரணமாகச் சொல்லி பெருமானார் மறுத்திருக்கலாம்ஆனால் பெருமானார் சகித்துக் கொண்டார்கள்.

 காலம் மாறும் என்ற சிந்தனை

 இன்று எதிரியாக இருப்பவன் நாளை மாறலாம் என்ற சிந்தனை கொஞ்சமேனும் வரும் எனில் அப்போதைய சூடு தானாக குறையும்

தாயிப் நகர மக்கள் கொடுந்துயரளித்த போதும் பெருமானார் அவர்களை சபிக்க வில்லை.

 இவர்களது சநததிகள் நேர்வழி பெறக் கூடும் என்று சிந்தித்தார்கள்.

 இப்படி சகிப்புத்தன்மையின் அனைத்து அம்சங்களும் பெருமானாரிடம் குடி கொண்டிருந்தன.  

 இதன் பலனை அவர்கள் முழுமையாக பெற்றார்கள்.

 பெருமானாரின் வாழ்வில் எதிர்ப்பு அதிகம் இருந்த போதும்  அமைதி தவழ்ந்தது.

 இழிவு படுத்தும் முயற்சிகள் தொடர்ந்த போதும் கண்ணியம் அதிகரிக்கவே செய்தது.

 சதித் திட்டங்களை தீட்டியவர்கள் சகோதரர்கள்  ஆனார்கள்.

 சகிப்புத் தன்மை கொண்டவர் வாழ்க்கையில் தானாக உயர்வார்பெருமானார் உயர்ந்ததைப் போல

 ஒரு ஆங்கிலப் பழ மொழி உண்டு

To run a big show one should have a big hart

சகிப்புத்தன்மை கொண்டவர்கள் வாழ்வின் சிரமங்களை இலேசாக எதிர்கொள்வார்கள்

 அப்துல்லாஹ் பின் சுபைர் ரலி அவர்களின் சகோதரி ரம்லாவுக்கு அவருடைய கணவருக்கும் ஒரு தகறாறு, திடீரென் கணவர் மோசமாக ஏச ஆரம்பித்து விட்டார். ரமலா அம்மையார் பொறுமையாகவும் கம்பீரமாகவும் அதை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். கணவர் களைத்து கோபம் சற்று தணிந்த  சந்தர்ப்பம் பார்த்து கணவரைப் பார்த்து புன்னகைத்தார்கள். கணவரும் புன்னகைத்தார். ஒரு புன்னகையில் என் கோபத்தை மாற்றிவிட்டாயே என்றார் கணவர் \. ரம்லா அம்மையார் சொன்னார். எனது ஒரு புன்னகை உங்களது கோபத்தை போக்கி விடும் என்பது எனக்குத் தெரியும், உங்களது கோபத்தை நான் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் உங்களது பேச்சுக்களை நான் தடுக்க வில்லை என்றார்.

 இந்த தத்துவத்தை நாம் சரிவர உணர்ந்து கொண்டோமானால் நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய வழிகாட்டுதல்கள் உண்டு.

·         கருத்து வேறுபடுகள் பகையாக மாறிவிடாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும். ஓவ்வொருவரும் அவரவர் விரும்பிய கருத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை அழுத்தமாக உணர வேண்டும்.

 ·         அடுத்தவர்கள் நமது விவகாரத்தில் தலையிடுகிற போது பெரிய பாதிப்பு ஏற்படும் வரை பொறுமை காக்க வேண்டும்.

 ·         விவகாரங்களின் போது நமது பண்பாட்டை விட்டு கீழிறங்கி விடக் கூடாது.

 ·         இது போல தவறுகள் நம்மிடமும் வரலாம் என்ற எண்ணத்தில் மன்னிக்கப் பழக வேண்டும்.

 ·         கருத்துவேறுபாடுகளில் உதவிகளை தடுக்க கூடாது.

 ·         காலம் இப்படியே இருந்து விடாது அது மாறும் என்பதை மறந்து விடக் கூடாது.

எல்லாம் வல்ல இறைவன் இன்றைய அமைதியற்ற சூழலை விரைவில் மாற்றியருள்வானாக. நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை கொடுத்து சந்தோசத்தை வளரச் செய்வானாக!