வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 30, 2023

எது சிறந்த நாகரீகம்.

ஆக்ரமிப்பு இஸ்ரேல் அரசு பாலஸ்தீன் மீது யுத்தம் தொடங்கிய ஆரம்ப காட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பென்ஞசமின் நெதன்யாகு இரண்டு வாசகங்களை முன் வைத்தார்.

நெதன்யாகு கூறினார்; we are in a battle of civilization against barbarism.”  இது காட்டுமிராண்டிகளை எதிர்த்து  நாகரீக சமூகம் நட்த்துகிற யுத்தம்.

இப்போது போர்க்கைதிகள் விடுதலை செய்யப்படுகிற சூழலில் யார் காட்டுமிராண்டிகள் என்பது உலகிற்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

இஸ்ரேலின் சிறையிலிருந்து விடுதலையான ஒரு இளம் பாலஸ்தீன இளைஞன்எனது விரல்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் முறித்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் பாலஸ்தீனர்களிடம் கைதியாக இருந்து விடுதலை பெற்ற 85 வயது பெண்ணின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். எங்களுடைய உறவினர். காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவருக்கான  மருந்துகளை அவர் எடுத்துச் செல்லவில்லை.. பாலஸ்தீன மருத்துவர்கள் அவருக்கும் மருந்துக்களை கொடுத்தார்கள். அந்த மருந்துகள் இஸ்ரேலில் அவர் சாப்பிட்ட மருந்துகளை விட அவருக்கு நல்ல உடல் நலனை கொடுத்துள்ளது. அவர் முன்பை விட இப்போது நலமாக இருக்கிறார்.

இது போல தண்ணீரும் பன்னும் கொடுத்து கைதிகள் விடுதலை செய்யப்படுகிற காட்சிகளில் பாலஸ்தீன் மக்களின் பண்பாடும் விருந்தோம்பலும் வெளிப்படுகிறது. மருத்துவ மனைகள் அகதி முகாம்கள் என காஸாவின் கிட்டதட்ட 80 சதவீத கட்டிடங்களை இஸ்ரேல் அரசு கொடூரமாக சின்னாபிட்ட படுத்திய போதும் கூட   இந்த  நெருக்கடிக்கு இடையிலும் பாலஸ்தீனர்கள், தங்களிடம் சிக்கியிருந்த கைதிகளை பத்திரமாக பாதுகாத்து மகிழ்ச்சியாக திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அந்த கைதிகள் ஒவ்வொருவரிடம் இஸ்லாமிய நாகரீகம் பற்றி பேசுவதற்கு ஏதாவது ஒரு செய்தி மிச்சமிருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகைய செய்திகள் மூலம் இஸ்ரேலிய சமூகத்திற்குள் ஹிதாயத் பரவ தவ்பீக் செய்வானாக!

நெதன்யாகு பேசி மற்றொரு வார்த்தை  it’s the battle of Western civilization  இந்த யுத்தம் மேற்கத்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கான யுத்தம்.மேற்கு நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக நெதன்யாகு மிக தந்திரமாக இந்த வார்த்தையை பிரயோகித்தார்.

ஆனால் இங்கு யோசிக்க வேண்டியது என்ன வெனில்

மேற்கத்திய கலாசாரம் என்பது நன்மையானதா ? பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றா ?

இந்த உலகிற்கு முஸ்லிம் சமுதயாம் உரத்து சொல்ல வேண்டிய ஒரு செய்தி இருக்கிறது. மேற்கத்திய நாகரீகம் உண்மையில் மனித சமூகத்திற்கு அவமானத்தையும் அவலட்சனத்தையும் தருகிற ஒரு நாகரீகமாகும்

சுயநலம் , ஆபாசம், போதை, எளிய மக்களை சுரண்டுதல், அதிகார ஆணவம் வன்முறை ஆகியவை தான் மேற்குலகம் உலகிற்கு கொடுத்தது.

அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்ப முன்னேற்றம் ஜனநாயகம், ஆகிய புற அம்சங்களில் மேற்கத்திய உலகு மேம்பாடு கண்டிருக்கிறது என்றாலும் நாகரீகத்திலும் பண்பாட்டிலும் மேற்குலகைப் போல மனித குலம் வீழ்ச்சியடைந்திருக்கிற நிலம் வேறெங்கும் இல்லை.

தீமை 1 சுய நலம்

மேற்குலக நாகரீகத்தின் முதல் பெரும் தீமை சுயநலத்தை நாகரீகமாக கருதுவதாகும். I am safe , I am happay என்பதே அவர்களது பிரதான் இலக்கு

பிறருக்கு என்ன நடக்கிறது. அவர்களது வலி வேதனை என்ன என்பதை திரும்பியும் பார்ப்பதில்லை. அவர்கள் சொந்த பெற்றோர்களாக இருந்தாலும் கூட.

கிழக்கத்திய நாடுகளின் பண்பும் கலாச்சாரமும் இதற்கு மாற்றமானது

நம்மைப் போலவே மற்றவர்களது நலனும் முக்கியம் என்று கருதக் கூடியது.

கிழக்கத்திய நாகரீகங்ளில் முக்கியமானது இஸ்லாம் . இஸ்லாம் கூறுகிறது. மதம் என்பது உபதேசம்.

ن تميم بن أوس رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم قال( الدين النصيحة ، قلنا : لمن يا رسول الله ؟ قال : لله ، ولكتابه ، ولرسوله ، ولأئمة المسلمين وعامتهمرواه البخاري ومسلم .

நஸீஹத் என்ற வார்த்தைக்கு பிறருக்கு நன்மையை நாடுதல் என்று பொருள்.

தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிற ஒரு மனிதன் உண்மையான முஸ்லிம் மதவாதியாக இருக்க முடியாது.

عن أنس بن مالك رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم  قال : ( لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه، رواه البخاري ومسلم .

 நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கிற அனைத்தையும் குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

 عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلمليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه. رواه الحاكم في المستدرك

 உங்களுக்குத் தெரிந்த்தை பிறருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்

ابن عباس رضي الله عنهما يقول : " إني لأمر على الآية من كتاب الله ، فأود أن الناس كلهم يعلمون منها ما أعلم

அல்லாஹ்வின் ஒரு வசனத்தை கடந்து போகிற போது அதை நான் அறிந்து கொள்வது போல மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என இப்னு அப்பாஸ் ரலி கூறுகிறார்கள்.

அதனால் அவர்கள் தேடித்தெரிந்த வற்றை தானமாக கற்றுக் கொடுத்தார்கள்.

கல்வியை காசுக்காக கற்றுக் கொடுத்த்து மேற்கத்திய கலாச்சாரமாகும். தன்னிடமிருக்கிற கல்வியை பிறருக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதை மனித சமூகத்திற்கு செய்கிற ஒரு தொண்டாக கொண்டு போய்ச் செர்த்த்து கிழக்கத்திய நாகரீகம். இதற்காக மக்கள் தாங்களாக விரும்பிக் கொடுக்கிற ஹதியா என்கிற காணிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டார்கள்.

உலகம் முழுக்க கல்விநிறுவனங்களை நிறுவிய முஸ்லிம்கள் தங்களது மதரஸாக்களில் கட்டணம் வசூலித்தது இல்லை.

இப்போதும் கூட பெரும்பாலான மதரஸாக்கள் அந்தப் பாரம்பரியத்திலேயே வளர்கின்றன.

இதன் புண்ணியத்தை அறிந்து செல்வந்தர்களும் புரவலர்களும் அந்த மதரஸாக்களுக்கு உதவினார்கள்.

கீழக்கரையில் அரூஸிய்யா என்ற அரபுக்கல்லூரி இருக்கிறது. அங்கு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்ற ஒரு பெரும் அறிஞர் கல்விக் கற்றுக் கொடுத்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் குவிந்தனர். அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு அப்போதைய முகலாய மன்னர் அவுரங்கசீப் உதவினார்,

கல்விக்கு கட்டாய காசு வசூலித்தல் என்ற நாடை மேற்கத்திய நடை முறையாகும். அது சுயநலத்திலிருந்து பிறந்ததாகும்

இன்று நாட்டில் ஏராளமான கல்விக் கூடங்கள் இருக்கின்றன. அவை சம்பதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றனவே இந்த தீமைக்கு மேற்கத்திய கலாச்சாரத்தை மக்கள் சுவீகரித்துக் கொண்டது காரணமாகும்.

அதே போல வியாபாரிகளும் மக்களுக்கு நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கிற நோக்கத்தில் வியாபாரம் செய்ய வேண்டும். மக்களை சுரண்டுவது நோக்கமாக இருக்க கூடாது.

கிழக்கத்திய வியாபாரத்தை பாருங்கள்.

لما أراد محمد بن واسع رحمه الله أن يبيع حمارا له ، قال له رجل : " أترضاه لي ؟ ، فردّ عليه : لو لم أرضه لك ، لم أبعه 

ஒரு கழுதை வியாபாரத்தில் “எனக்கு இது பொருத்தமானதா என வாங்குபவர் கேட்க உங்களுக்கு இது பொருத்தமானது அல்ல என்று தெரிந்தால் நான் இதை விற்கவே மாட்டேன் என்றார் முஹம்மது பின் வாஸிஃ

மேற்கத்திய வியாபாரத்தை பாருங்கள்.

ஒரு பேஸ்ட் நிறுவனம் அதன் வியாபாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிக்கிறது. இன்றைய கல்வி முறையில் நிர்வாகம் படித்த அதிகாரி ஆலோசனை சொல்கிறார். பேஸ்ட் டியூபின் வாயை நாம் கொஞ்சம் பெரிது பண்ணலாம். அப்போது 30 நாளில் தீர்ந்து போகிற பேஸ்ட் 25 நாளில் தீர்ந்து போகும். நமது வியாபாரம் அதிகரிக்கும் என்கிறார்.

வியாபார நிறுவனங்கள் வகை வகையான திட்டங்களைச் சொல்லி மக்களின் பணத்தை சுரண்டுவதை நோக்கமாக கொண்டிருப்பதை இன்றைய வியாபார உலகில் அப்பட்டமாக பார்க்கிறோம். 2500 ரூபாய் என்று ஒரு பொருளுக்கு விலை போட்டு விட்டு அதை டிஸ்கவுண்டில் 400 ரூபாய்க்கு விற்கிறார்கள் எனில் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.

சாதாரணமாக சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கிலே நெய் வாங்குவது என்றால் அது 900 ரூபாய் இருக்கும் என்று ஒரு சாதாரண வாடிக்கையாளர் முடிவு செய்திருப்பார். பிரபல கம்பெனிகள் அனைத்தும் அதே போன்று விலை வைத்திருப்பார்கள். இதே பொருள் லூஸ் மார்க்கெட்டில் 200 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த பிராண்ட் நெய்யே வேறு சில இடங்களில் 700 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால் இன்றைய வர்த்தகம் எப்படி மக்களை சுரண்டுவதாக மாறி இருக்கிறது பாருங்கள்.

சாமாணிய மக்களுக்கு பொருத்தமானது என்ற சிந்தனை விடை பெற்று கம்பெனிக்கு இலாபம் என்ற சிந்தனை மேலோங்கியிருப்பது மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாகும்.

தீமை 2 ஆபாசம்

இன்று எந்தப் புறம் திரும்பினாலும் ஆபாசமே ஆளுகிறது.

தேனியில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவனிடம் விலை உயர்ந்த மொபைல் போன் இருந்தது. ஏழ்மையில் இருக்கும் மாணவனிடம், எப்படி விலை உயர்ந்த மொபைல் போன் இருக்கும், என ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஆசிரியர் மாணவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தார். அப்போது, அதே மொபைல் போன் வேறு வகுப்பில் உள்ள மற்றொரு மாணவரிடம் இருந்தது. அதை பறிமுதல் செய்த ஆசிரியர், மாணவரிடம் அன்பாக விசாரித்து, சோதனை செய்த போது,பல ஆபாச வீடியோ படங்கள் இருந்தது.

 இந்த மொபைல் போனை .டி.., மாணவர் ஒருவர், பள்ளி மாணவர்களிடம் வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு நாளைக்கு 50 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது. இதை மாணவர்கள் போட்டி போட்டு, நாள் வாடகைக்கு வாங்கி படம் பார்த்து வரும் விவரம் தெரியவந்தது.

 கர்நாடக சட்ட மன்றத்தில் கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிற போதே மக்கள் பிரதிநிதி ஒருவர் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த விவகாரம் மாநிலத்தையெ உலுக்கியது.

ஆண்களுக்கு பயன்படுகிற ரேஸர் விளம்பரத்தில் கூட கவர்ச்சியான பெண்ணின் புகைப்படம் இடம் பெறுவதும். தேவையே இல்லாமல் விளம்பரங்கள் விளையாட்டுக்கள் ஏன் கல்விக் கூடங்களில் கூட கவர்ச்சிகரமான ஆடைகளுக்கும் நடனங்கள் உள்ளிட்ட ஆபாசங்களுக்கு இடமளிக்கப்பட்ட போது , ஆபாசமான தோற்றம் தருவதை பெருமையாகவும் உயர் தட்டு மக்களின் நடைமுறையாகவும் கருதுகிற மனோ நிலை ஏற்பட்டு விட்டது.

ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் பெரியவர்கள், சிறுவர்கள் என யாரும் இந்த ஆபாச மோகத்திலிருந்து தப்ப வில்லை என்கிறது ஒரு ஆய்வு.

நீங்கள் ஒரு நல்ல அறிவுரையை பதிவு செய்வதாக இருந்தால் கூட ஒரு கவர்ச்சியான புகைப்படத்துடன் பதிவிட்டால் தான் அது கவனிக்கப்படும் என்கிற அளவில் இன்றைய சூழல் இருக்கிறது.

மேற்கத்திய கலாச்சாரம் மக்களது இதயங்களில் நிறுவி விட்டது. அதுவே ஆபாசம் இப்போது சைத்தானைப் போல இரத்த நாளமெங்கும் ஊடுறுவியிருக்கிறது.

பிக் பாஸ் என்கிற நிகழ்ச்சி அப்பட்டமான கேவலமான ஒரு நிகழ்ச்சி எந்த மரியாதையுள்ள மனிதனுடம் தன்னுடைய மனைவி அல்லது மகள் அல்லது சகோதரி இப்படி இருக்க அனுமதிக்க மாட்டான். அதை ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது. தொலைக்காட்சியில் அதிகம் வருவாய் தருகிற  நிகழ்ச்சியாக அது இருக்கிறது.

இது நிச்சயமாக கீழை நாடுகளின் பண்பாடு அல்ல. பெண்களின் ஈர ஆடைகளை கூட பொது வெளியில் காயப்போட தயங்குவார்கள். பெண்களுக்கான நாப்கின்களை பேப்பரில் சுற்றிக் கொடுப்பார்கள். இஸ்லாம் எச்சரிக்கையின் உச்சமாக அந்நியப் பெண்ணை உற்றுப் பார்ப்பதை ஹராம் என்று கூறியது.

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (30) وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ}[النور:30، 31].

 அபாசத்தின் அனைத்து வடிவங்களையும் விட்டு விலக குர் ஆன் அறிவுறுத்தியது.

ولا تَقْرَبُوا الفَواحِشَ ما ظَهَرَ مِنها وما بَطَنَ}[الأنعام:152].

 பெருந்தலைவர் எந்த அன்னியப் பெண்ணையும் பெருமானார் தொட்ட்தில்லை.

 جاء في البخاري عن عائشة رضي الله عنها (وما مَسَّتْ يَدُ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَدَ امْرَأَةٍ إلَّا امْرَأَةً يَمْلِكُهَا)

 பன்றியிடம் கூட அறுவறுப்பாக பேசாத ஈஸா நபி. என் நாவை தீய வார்த்தைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்கள்.

  وقد روى مالك عن يحيى بن سعيد أن //عيسى بن مريم لقي خنزيراً في طريق فقال له: انفذ بسلام. فقيل له: تقول هذا لخنزير؟ فقال عيسى ابن مريم: إني أخاف أن أعود لساني المنطق السوء

 நாவையும் கர்ப்பையும் பாதுகாத்துக் கொள்கிறவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் உயர்வான இடமுண்டு  என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

 عن سهل بن سعد رضي الله عنهما مرفوعاً«من يضمن لي ما بين لَحْيَيْهِ وما بين رجليه أضمن له الجنة».  [صحيح] - [رواه البخاري]

 இந்த கேரண்டியை வழங்குவது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 ஓரினச் சேர்க்கையை சாதாரணமாக மேற்கத்திய உலகம் அனுமதிக்கிறது. அதன் மூலம் மனித வாழ்வின் மதிப்பையும் மாண்பையும் மிக கீழ்த்தரமானதாக மாற்றிவிட்டது.

 இஸ்லாம் இந்த இயல்பை மனித வாழ்வை தலைகீழாக புரட்டிப்போடும் தீமை என்கிறது.

 فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ . مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ ۖ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ}[هود:82، 83].

 وقد قال صلى الله عليه وسلم: (مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ)[رواه أحمد

 தீமை 3 போதை

 மேற்குலக நாகரீகம் என்பதன் மற்றொரு அடையாளம் போதை என்பது அனைவரும் அறிந்த்தே!

 இன்று ஏற்பட்டுள்ள சோதனை என்ன வெனில் அந்த போதையை தப்பில்லை என்கிற அளவுக்கு ஒரு மனோ நிலையை ஏற்படுத்திர்யிருக்கிறார்கள்.

 கிழக்கத்திய நாடுகள் அனைத்திலும் போதை ஒரு அவலட்சணமாகவே பார்க்கப்பட்டது. தீமையாகவே கருதப்பட்டது

 இஸ்லாம் போதையின் அனைத்து வகையையும் வன்மையாக தடை செய்தது.

 فقد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قالما أسكر كثيره فقليله حرام. رواه الترمذي.

பான் பராக் பீடா எதுவாக இருந்தாலும் போதை தரும் எனில் அது ஹராம்  என்றார்கள் நபிகள் நாயக்ம் (ஸல்)

 ஆயிரமாண்டுகளுக்குப் பிறகு இன்று வரை போதை இல்லாத ஒரு உலகத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 தமிழகத்தில் காணுமிடமெல்லாம் டாஸ்மாக்குகள் நிறைந்திருக்கிற போது முஸ்லிம்களின் வாழ்விடங்களில் அதனை காணமுடியாது.

 போதைப் பெருட்களால் இன்று ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகளை  இன்றைய செய்தித்தாள்களை புரட்டினால் அறிந்து கொள்ளலாம்.

 போதையை குற்றமற்றதாக்கியது மேற்கத்திய நாகரீகமாகும். அதுவே உலகிற்கு அது செய்த பெரும் கொடையாகும்.

 தீமை 4 வன்முறை

 தனக்கு பிடிக்காதவர்கள் மீது வரன்முறையற்ற வன் முறைகளை கட்டவிழ்த்து விடுவது மேற்கத்திய இயல்பாகும்.

 மன்னிப்பதும் உயிர்களைப் பாதுகாப்பது கிழக்கத்திய பண்பாகும். சூரியன் மறைந்து விட்டதால் ராவணனை இன்று போய் நாளை வா என்று திருப்பி அனுப்பினான் என்று ராமாயணம் கூறுகிறது.

 மக்களுக்கான எச்சரிக்களும் வாய்ப்புக்களும் கொடுத்த பிறகே அவர்கள் மீது யுத்தம் செய்வது ஆகுமானதாகும் என்று இஸ்லாம் கூறுகிறது.

 மேற்குலகம் நவீன் காலத்தில் அத்தகைய எந்த நாகரீக கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பதில்லை. இராசாயண ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்களை உருக வைத்து கொன்றார்கள் மேற்கத்தியவர்கள்.

 இராக்கில் ரசாயண ஆயுதங்கள் இருக்கிறது என்று சொல்லி இலட்சக்கணக்கான மக்களை கொடூரமாக கொலை செய்தது அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும்.

 வளமான் அந்த நாடு முற்றிலும் சீரழிந்து முடிந்த பிறகு அங்கு அப்படி எதுவும் இல்லை என்று மேறு நாடுகள் அறிவித்தன.

 நவீன உலகம் கண்ணார கண்ட அக்கிரமம் இது.

 இரண்டு உலக யுத்தங்களின் போது 12 கோடி மக்களை கொன்றவர்கள் மேற்கத்தியவர்களே ! அணுகுண்டை பயன்படுத்தி இரண்டு பெரும் ஹிரோஷிமா நாகாசாகி என்ற இரண்டு பெரு நகரங்களை அடியோடு அழித்தவர்கள் மேற்கத்தியவர்களே.

உலகில் தீவிரவாத அமைப்புக்கள் அனைத்திற்கும் ஆயுத சப்ளை செய்கிறவர்கள் மேற்கத்திய நாடுகளே!

இதோ இப்போது சுமார் 16 ஆயிரம் அப்பாவி காஸா மக்களை மிருக வெறியோடு கண் மூடித்தனமாக தாக்கிய இஸ்ரேலின் செயலும் மேற்கத்திய குணமே!

இஸ்ரேலுக்கு தன்னை காத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது என்று கூறி இஸ்ரேலை ஆதரிப்பதும் மேற்கத்திய குணமே

இவற்றில் கீழை நாடுகளுக்கோ இஸ்லாமிற்கோ எந்த சம்பந்தமும் இல்லை.

குழந்தைகளுக்கான் விளையாட்டுக்களில் கூட வன்முறை குணத்தை புகுத்தி வரக் கூடியது மேற்கத்திய நாகரீகம்.

எனவே மேற்கத்திய நாகரீகம் என்பது உலகின் படு மட்டமான கலாச்சாரமாகும்.

நம்மில் ஒவ்வொருவரும் மேற்கத்திய தீய கலாச்சாரத்தை விட்டு விலகி நிற்பதும் அதற்கு எதிராக போராடுவதும் மனித குலத்திற்கு செய்கிற உபகாரமாகும்.

எல்லாம் வல்ல இறைவன் நன்மை நிலை பெற வாய்ப்பளிப்பானாக! அதை நிலை நாட்டும் சக்தியை நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக!

 

1 comment:

  1. Anonymous8:52 PM

    Subhanallah barakallahu feekum

    ReplyDelete